மாமல்லபுரம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கல்வி விருது வழங்கும் விழா, இறுதி கட்டமாக மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது.
இதில், சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தவெக.தலைவர் விஜய் பங்கேற்றார். விழாவில், சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரி என்ற பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த மாணவி மின்சார இணைப்பு இல்லாத தன்னுடைய வீட்டில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தது குறித்து கூறினார்.
மேலும், தற்போது ஐஐடியில் கல்வி பயில உள்ளதாகவும், விஞ்ஞானியாக ஆக வேண்டும் என மாணவி விருப்பம் தெரிவித்தார். அந்த மாணவியிடம், விஞ்ஞானியாகும் உங்களது கனவு நிறை வேறும் என விஜய் வாழ்த்து தெரிவித்து, ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார்.
இதையடுத்து, 39 தொகுதிகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 234 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றுகள் மற்றும் ரூ.5 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
நலத்திட்ட உதவி: தவெக தலைவர் விஜய்யின் 51-வது பிறந்தநாள், வரும் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை தெற்கு மாவட்ட தவெக சார்பில் தி.நகரில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், 5 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், 51 மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் கல்வி உதவித் தொகை, 51 பெண்களுக்கு சுயதொழில் தொடங்க தையல் இயந்திரம், 51 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.2,500 மதிப்பிலான மளிகை தொகுப்பு ஆகியவற்றை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வழங்கினார். நிகழ்வில், மாவட்டச் செயலாளர் க.அப்புனு என்ற வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.