சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சில கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 3 மற்றும் 4-ம் தேதி அன்று தொடர்வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதை தொடர்ந்து “வேலை செய்யாவிட்டால் ஊதியம் இல்லை” என்ற அடிப்படையில் ஊதியம் மற்றும் படிகள் வழங்க இயலாது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் செப்டம்பர் 25 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட பணியை முற்றிலுமாக புறக்கணித்து அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் விவரங்களை அரசுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், செப்.3 மற்றும் 4-ம் தேதி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற வருவாய்த்துறை அலுவலர்களின் ஊதியத்தை அந்த 2 நாட்களுக்கு பிடித்தம் செய்து அதன் விவரங்களை உடனடியாக வருவாய் நிர்வாக ஆணையரகத்துக்கு அனுப்ப வேண்டும்.
அதேபோல், செப்டம்பர் 25 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பணிகளை முற்றிலுமாக புறக்கணித்த மற்றும் புறக்கணித்து வரும் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது காரணம் கேட்கும் குறிப்பாணை ஏற்படுத்துமாறும், “வேலை செய்யாவிட்டால் ஊதியம் இல்லை” என்ற அடிப்படையில் (முன் அனுமதி இன்றி பணிக்கு வராதவர்கள்) மீது நடவடிக்கை எடுத்து அதுதொடர்பான விவரங்களை உடனடியாக ஆணையரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.