சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்களின் செயலாக்கம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆய்வு நடத்தினார்.
கூட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருவதை தொடர்ந்து, இதற்காக நன்கு திட்டமிட்டுப் பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பாராட்டினார். அதேபோன்று, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டமும் மிகச் சிறப்பாக நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரத்துறை சார்ந்த மருத்துவர்கள் மற்றும் துறை அலுவலர்களையும் பாராட்டினார்.
தொடர்ந்து, கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: மாவட்ட ஆட்சியர்கள் தாங்கள் பெற்ற மனுக்கள் மீது விரைவாகத் தீர்வு காண வேண்டும். குறிப்பாக, வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், பட்டாவில் பெயர் திருத்தம் ஆகியவை தொடர்பான மனுக்களில் நிலுவையில் உள்ளவற்றை விரைந்து நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும். ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களின் திட்ட ஏற்பாடுகளில் ஒருசில இடங்களில் ரத்தப் பரிசோதனை முடிவுகள் வழங்குவதில் தாமதம், போக்குவரத்து ஏற்பாடுகள் போன்றவை குறித்து எனது கவனத்துக்கு வந்தது. அந்த குறைகளை சரி செய்ய வேண்டும்.
டோக்கன் வழங்கும் பகுதிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அதிக கவுன்ட்டர்கள் ஏற்படுத்த வேண்டும். முகாம்கள் நடப்பது குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரங்கள் செய்ய வேண்டும். முகாம்களில் பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் போதுமான அளவுக்கு ஏற்படுத்த வேண்டும்.
இவற்றையெல்லாம், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கவனத்தில் கொண்டு, குறைபாடுகள் இல்லாமல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களை நடத்த வேண்டும். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு துறை அமைச்சர்கள், தலைமைச்செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.