மதுரை: “இஸ்லாமிய விசாரணை கைதிகளின் தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் திமுக ஆட்சியை வீழ்த்தும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசலில் விசாரணைக் கைதிகள் போலீஸ் பக்ரூதீன், பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “போலீஸ் பக்ரூதீன், பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் விசாரணை கைதிகளாக உள்ளனர்.
மூவரையும் சிறையில் போலீஸார் அடித்து சித்திரவதை செய்து வருகின்றனர். அவர்களை சிறையில் குடும்பத்தினர் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இறக்கும் தருவாயில் உள்ள கைதிகளை கூட விடுதலை செய்யாமல் உள்ளனர். இஸ்லாமிய மக்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்கிறார்கள். சிறையில் வைத்துதான் பாதுகாப்பீர்களா? இஸ்லாமிய தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் இந்த ஆட்சியை வீழ்த்தும்.
இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இதுவரை அந்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றவில்லை. உடல்நிலை காரணமாக கைதிகளை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த அரசு கைதிகளை விட முடியாது என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு சிறையில் கைதிகளை அடித்து துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர். இதை கண்டித்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்று சீமான் கூறினார்.