சென்னை: இஸ்ரேல் – ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உடனடியாக அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் இஸ்ரேல் – ஈரான் இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இந்தச் சூழலில் ஈரான் நாட்டிலிருந்து இந்திய வெளியுறவுத்துறை மூலமாக இந்தியர்கள் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை கண்டுபிடித்து தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.
இதற்கென புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24×7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதவி எண்கள் பின்வருமாறு: தொலைபேசி: 011 24193300 (Land line), கைப்பேசி எண்: 9289516712 (Mobile Number with Whatsapp), மின்னஞ்சல்: tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசின் சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தில், செயல்பட்டுவரும் 24×7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளவும், தங்கள் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவிற்குள் – 1800 309 3793, வெளிநாடு: +91 8069009901 / 08069009901, +91 8069009900 / 08069009900 (Missed Call) மின்னஞ்சல் – nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.