சென்னை: பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை முதல்வர், தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பெண்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி
கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றாவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க முடியாது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்சோ வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குற்றமிழைக்க முற்படும் கயவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இத்தீர்ப்பு இருக்கும்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை: மலர் போன்று இருந்த பெண்கள் கசக்கி வீசப்பட்ட பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட தீர்ப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தீர்த்து வைக்கட்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு போராடும் பெண்களுக்கு வாளும், கேடயமுமாக இருக்கும். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வரவேற்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: பாதிக்கப்பட்ட பெண்களின் நீதிக்கான உறுதியை வெளிப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதிசெய்வது பெண்களுக்கு பெரும் நம்பிக்கையை தருவதாகும். வன்முறைக்கு இலக்காகும் பெண்களை மவுனித்துப் போகச் செய்யும் போக்கை இப்பெண்கள் முறியடித்துள்ளனர்.
பாமக தலைவர் அன்புமணி: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. என்றாலும் இது தாமதிக்கப்பட்ட நீதிதான். இதற்குக் காரணம் போதிய எண்ணிக்கையில் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாதது. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மகளிர் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் துணிச்சலாகப் போராடி, குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தந்த பாதிக்கப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும், இந்தத் தீர்ப்பு ஓரளவாவது மன ஆறுதல் அளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன். இந்த வழக்கில் நியாயம் கிடைக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: இந்த தீர்ப்பு கொடுங்காயத்துக்கு இடப்பட்ட மாமருந்து. கூட்டுப் பாலியல் குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
தேமுதிக பொதுச்செயலாளர்பிரேமலதா: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உலகமே பாராட்டக்கூடிய தீர்ப்பை கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம். இந்த வழக்கை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு இனி வருங்காலங்களில் இளைஞர்கள் இது போன்ற தவறுகளை செய்யாமல் கண்ணியத்தோடு இருக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை செயல் மிருகத்தனமானது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. தவறான கண்ணோட்டத்துடன் பெண்களை பார்ப்பவர்களுக்கும், சிந்திப்பவர்களுக்கும் இத்தீர்ப்பு பாடமாக அமையும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இந்த தீர்ப்பு பெண்களிடம் ஈவு இரக்கமின்றி அவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி.
தவெக தலைவர் விஜய்: வரவேற்கத்தக்க தீர்ப்பு. ஆனால் தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிக்க தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர்களுடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.