சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று (ஜூலை 14) முதல் தொடங்குகிறது. முதல் சுற்றில் 39,145 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 90,166 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 2 லட்சத்து 41,641 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியானது.
தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக முன்னாள் ராணுவ வீரரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் 11-ம் தேதி வரை நடைபெற்றது. சிறப்புப்பிரிவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்த நிலையில், அதில் 994 இடங்களில் மட்டுமே நிரம்பின. இதில் 125 இடங்கள் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.
இதையடுத்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று (திங்கள்) முதல் தொடங்குகிறது. முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 39,145 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை ஜூலை 16-ம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 17-ம் தேதி காலையில் வெளியிடப்படும். அதற்கு மறுநாள் (ஜூலை 18) மாலை 5 மணிக்குள் ஒப்புதல் அளித்து மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். மேலும், இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 23-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
இதற்கிடையே கலந்தாய்வின்போது விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதிசெய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மாணவர்கள் செயல்பட வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறவுள்ள இந்த கலந்தாய்வு ஆக. 20-ம் தேதியுடன் நிறைவு பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.