விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலர் காலில் விழ வைத்த சம்பவத்தில் நகராட்சி தலைவரின் கணவர் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. திண்டிவனம் நத்தைமேடு பகுதி விஎம்எஸ் நகரைச் சேர்ந்தவர் மரூர் ராஜா, குண்டர் சட்டத்தில் கைதான சாராய வியாபாரி. முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவர்.
இவரது மனைவி ரம்யா, திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவர் ஆகஸ்ட் 29-ம் தேதி நகராட்சி அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு, தெருவிளக்கு தொடர்பான கோப்புகளைத் தேடிக் கொண்டிருந்த இளநிலை உதவியாளர் முனியப்பனிடம், தனக்கு தேவையானபதிவேட்டை ரம்யா கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது கவுன்சிலர் ரம்யாவை முனியப்பன் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புகார் அளிக்க, ஆணையரின் அறையில் கவுன்சிலர் ரம்யா காத்திருந்தார். அலுவல் பணி காரணமாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் அங்கிருந்தனர்.
அப்போது அங்கு வந்த நகர்மன்றத் தலைவர், நிர்மலாவின் கணவரும் கவுன்சிலருமான ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் கவுன்சிலர் ரம்யாவிடம் இளநிலை உதவியாளர் முனியப்பன் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் வாய் சொல்லால் கேட்டால் போதுமா? என கேள்வி எழுந்ததால் இளநிலை உதவியாளர் முனியப்பன் கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழுந்துள்ளார்.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மேலாளர் நெடுமாறனிடம் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் சார்பில் ஜனார்த்தன் நேற்று முன்தினம் மனு அளித்தார். இதற்கிடையே, பெண் கவுன்சிலர் காலில் இளநிலை உதவியாளர் முனியப்பன் விழும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.
அதைத்தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் தலைமையில் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது பட்டியலினத்தைச் சேர்ந்த நகராட்சி ஊழியரை காலில் விழ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இந்நிலையில் முனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் கவுன்சிலர் ரம்யா, அவரது கணவர் ராஜா, நகர்மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன், திமுக பிரமுகர்கள் காமராஜ், பிர்லா செல்வம் உள்ளிட்டோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் திண்டிவனம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் கவுன்சிலர் விளக்கம்: இந்நிலையில், பெண் கவுன் சிலர் ரம்யா திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷிடம் அளித்துள்ள புகாரில், “கோப்புகளை தேடும் பணியில் உதவிக்கு ஒருவரை உடன் வைத்து கொள்ளுமாறு கூறியதற்கு, இளநிலை உதவியாளர் முனியப்பன் என்னிடம் ஒருமையில் பேசினார்.
இதுதொடர்பாக ஆணையர் (பொறுப்பு) சரவணன் கேட்டு கொண்டதன் பேரில் மனு கொடுக்க காத்திருந்தேன். முனியப்பனுக்கு ஆதரவாக ஆணையர் அறையில் இருந்த அலுவலர்கள் சமாதானம் பேசினர். இந்நிலையில் எனது காலில் முனியப்பன் திடீரென விழுவது போல் விழுந்து, தவறான எண்ணத்
தில் எனது கால்களை வலது கையால் பிடித்துக் கொண்டு, உடலை இடது கையால் தொட்டார். உடனே சுதாரித்த நான், நாற்காலியை நகர்த்தி போட்டு உட்கார்ந்துவிட்டேன். பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்திய முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண் டுள்ளார்.