சென்னை: இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “குற்ற வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நான் புழல் சிறையில் அடுக்கப்பட்டுள்ளேன். புழல் சிறையில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுகிறது. அந்த உணவு எனது உடலுக்கு ஒத்துழைக்கவில்லை. எனது கைது குறித்து இலங்கை தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை. எனவே, இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்ய மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, “இலங்கை நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டது குறித்து அந்நாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்காதது வியன்னா ஒப்பந்தத்தை மீறும் செயல்,” என்று வாதிட்டார். சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், “இலங்கை தூதரத்துக்கு மத்திய அரசு தான் தகவல் தெரிவிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நமது நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்கும் போது தூதரக அதிகாரிகளை சந்திப்பதற்கு அனுமதி கேட்பார்கள். அதேபோல, அந்நாட்டை சேர்ந்த நபருக்கு தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். கைது குறித்து இலங்கை தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்து சிறை நிர்வாகத்திடம் கேட்டு தகவல் தெரிவிக்குமாறு கூறினர்.
இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.