ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்ற டல்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மன்னார் வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சனிக்கிழமை பிற்பகல் படகை சிறைபிடித்தனர்.
படகிலிருந்த டல்லஸ் (56), சிலைடன் (26), அருள் ராபர்ட் (53), லொய்லன் (45), ஆரோக்கிய சான்ரின் (20), பாஸ்கர் (45), ஜேசு ராஜா (32) ஆகிய 7 மீனவர்களை மீது, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மன்னார் நீதிபதி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 07 பேர்களையும், ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகே மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் மீனவ பிரதிநிதி சேசுராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கடந்த 50 நாட்களில் 64 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதம், ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று 24 மீனவர்கள் தண்டனை கைதிகளாக உள்ளனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 88 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி (திங்கட்கிழமை) நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, ஆகஸ்ட் 19 அன்று ராமேசுவரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
மேலும், நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காணவும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்ற தர மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.