ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 விசைப்படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்றனர். ஈசாக் என்பவரது விசைப்படகில் சென்ற ரூதர், சண்முகம், எடிசன், சக்திவேல், ஜெகதீஷ், டல்வின் ராஜ், அன்பழகன் ஆகிய 7 மீனவர்கள், நெடுந்தீவு அருகே பாக் நீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி, ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்தனர். அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். 7 பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், ஊர்காவல்துறை நீதிபதி உத்தரவின்பேரில் யாழ்ப்பாணம் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
அதேபோல, கச்சத்தீவு – நெடுந்தீவு இடையே மரியசீரோன் என்பவரது விசைப்படகை சிறைபிடிக்க இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு வேகமாக வந்தது. அந்த படகு மோதியதில் விசைப்படகின் பின்பகுதி சேதமடைந்தது. படகில் இருந்த 7 மீனவர்களும் வேகமாக படகை இயக்கி ராமேசுவரம் வந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.