சென்னை: இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் நியமனத்துக்கான தேர்வு நடைமுறைகள் முடிந்த பின், காலியிடங்களின் எண்ணிக்கையை 35-ல் இருந்து 54 ஆக அதிகரித்து மருத்துவ தேர்வு வாரியம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக இருந்த மூன்று இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று மருத்துவ தேர்வு வாரியம், 2020 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. கரோனா ஊரடங்கு காரணமாக அப்போது தேர்வு நடத்தப்படவில்லை.
பின்னர், இந்த காலியிடங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், 2025 மார்ச் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கையை 35-ல் இருந்து 54 ஆக அதிகரித்து கடந்த ஏப்ரல் மாதம் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதை எதிர்த்து சித்தார்த், அண்ணாமலை, அமிர்த செல்வராஜன் ஆகிய மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், அசாதாரண மற்றும் அவசர சூழ்நிலைகளின் போது காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். இந்த வழக்கில் அதுபோல அசாதாரண சூழல் ஏதுமில்லை எனக் கூறி, காலியிடங்களின் எண்ணிக்கையை 35-ல் இருந்து 54 ஆக அதிகரித்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தேர்வு நடைமுறைகள் முடிந்த பின் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இதை அனுமதித்தால், பின்னாளில் தகுதி பெற்று வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வு அடிப்படையில் 35 காலியிடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்