சென்னை: சென்னை எழும்பூர் அருகே தாசப்பிரகாஷ் பகுதியில் உள்ள தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடம் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் இடிந்து விழும் நிலையும் உள்ளது. இதனால், இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர். உடனடியாக, இக்கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை எழும்பூர் அருகே தாசப்பிரகாஷ் பகுதியில் தமிழக ரயில்வே காவல் துறையின், சென்னை மாவட்டத்துக்கான ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் அருகே வலதுபுறத்தில் இந்த அலுவலக கட்டிடம் இருக்கிறது.
இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் ரயில்வே காவல்துறைக்கான அமைச்சுப் பணியாளர்கள் அலுவலகம், முதல் தளத்தில் காவல் கண்காணிப்பாளர் அறை, காவல் கட்டுப்பாட்டு பிரிவு, எஸ்.பி. சிறப்பு குற்றப்பிரிவு உட்பட பல்வேறு பிரிவு அலுவலகங்கள் இயங்குகின்றன. தரைதளம், முதல்தளத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் பணியாற்றும் காவலர்கள், காவல் கண்காணிப்பாளரை பார்க்க வரும் பொதுமக்கள், மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் ஒருவித அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கட்டிடத்தின் முன்பக்கத்தில் சிலாப்புகள் திடீர் திடீரென பெயர்ந்து விழுவதுதான்.
கீழ் தளத்தில் காவல் பணியில் இருக்கும் காவலர் மீதும் கட்டிடத்தின் கட்டுமான சிலாப்புகள் பெயர்ந்து விழும் அவல நிலை உள்ளது. மேலும், கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் விரிசல்கள் காணப்படுகின்றன. கட்டுமான சிலாப்புகள் எப்போது நம் மீது பெயர்ந்து விழும் என்று அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
இது குறித்து, பணியாளர்கள் சிலர் கூறும்போது, “இந்த கட்டிடம் ரயில்வேக்கு சொந்தமானது. மேலும், இது ஒரு பழமையான கட்டிடமாகும். முகப்பு பகுதியில் சிலாப்புகள் இடிந்து கீழே விழும் நிலை இருக்கிறது. இதை சீரமைத்து வருகின்றனர். இந்த கட்டிடத்துக்கு பதிலாக, மாற்று கட்டிடம் ரயில்வேயிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து இதுவரை பதில் இல்லை. தற்போது, கட்டிடத்தின் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து தருவதாக தெரிவித்து உள்ளனர். விரைவில் வேறு இடத்தில் கட்டிடம் தயார் செய்து தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றனர்.