திண்டுக்கல்: செங்கோட்டையன் கருத்து குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவே எங்கள் முடிவு, அவரது கருத்தே எங்கள் கருத்து என, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன், அமைப்புச் செயலாளர் மருதராஜ், முன்னாள் எம்எல்ஏ.,க்கள் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் எடப்பாடி பழனிசாமி கூறும் கருத்துக்கு கட்டுப்படுவோம். செங்கோட்டையன் அவரது கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் முடிவு எடுப்பார். அவரது முடிவே எங்கள் முடிவு, இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து திண்டுக்கல்லில் நடந்த கோபாலநாயக்கரின் 221 வது நினைவு தின நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு செய்தியாளர்களிடம் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அனைவரும் ஒன்றிணைவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் தான் முடிவெடுக்கவேண்டும். நாங்கள் அத்தனைபேறும், பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு கட்டுப்படுவோம். அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதுதான் எங்கள் முடிவு. எடப்பாடியார் கருத்துதான் எங்கள் கருத்து.” என்றார்.