‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ என தனது எழுச்சிப் பயணத்தை ஜூலை 7-ம் தேதி, கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து தொடங்கிய எடப்பாடியார் 16 நாட்களில் 35 தொகுதிகளை கடந்து தனது முதல்கட்ட பிராச்சாரப் பயணத்தை முடித்திருக்கிறார்.
2010 ஜூலையில் அப்போதைய திமுக ஆட்சிக்கு எதிராக கோவையில் தான் தனது முதல்கட்ட பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்தினார் ஜெயலலிதா. அம்மா வழியில் இபிஎஸ்ஸும் கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து சென்டிமென்டாக இப்போதைய திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கான தனது பிராச்சாரப் பயணத்தை அதே ஜூலை மாதத்தில் கடந்த 7-ம் தேதி தொடங்கினார். ஆட்சிக்கு எதிரான தனது பிரச்சாரப் பயணத்தின் தொடக்கம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் கோவையை தொடக்கப் புள்ளியாக தேர்வு செய்தார் இபிஎஸ். படை திரட்டுவதில் கைதேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தன்னளவில் சுறுசுறுவென சுழன்றார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளையும் அதிமுக கூட்டணியே அள்ளியது. அதற்குக் காரணமாக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலுமணியை டார்கெட் வைத்து ஸ்டாலின் செய்த பிரச்சாரத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல் அனைத்துத் தொகுதியிலும் அதிமுக அணிக்கு வெற்றியைக் கொடுத்தார்கள் கோவை மக்கள். அந்த செல்வாக்கை கோவை மாவட்ட நிர்வாகிகள் இப்போதும் அப்படியே கூட்டம் கூட்டுவதில் எதிரொலிக்கச் செய்தார்களா என்றால்… இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கோவையில் இரண்டு நாட்கள் முகாமிட்ட இபிஎஸ், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். நடுவில், ரோடு ஷோ, நடைப்பயிற்சி, கலந்துரையாடல் மூலமும் மக்களைச் சந்தித்தார். இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு மக்களை திரட்டி நிறுத்த அதிமுக எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தவறிவிட்டார்கள். அத்தனை பேருமே, ‘எல்லாம் வேலுமணியே பார்த்துக்குவாரு’ என்ற சிந்தனையில் இருந்துவிட்டார்களோ என்னவோ!
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை அதிமுக-வினர், “பொதுச்செயலாளரின் இந்த பிரச்சாரப் பயணம் கோவையில் அதிமுக-வினர் மத்தியில் உற்சாகத்தை வரவைத்திருக்கிறது என்றாலும் கோவை மாவட்டத்தையே தன்வசப்படுத்தி வைத்திருக்கும் அதிமுக, பொதுச்செயலாளரின் பிரச்சார பயணத்தை பிரம்மாண்டப்படுத்துவதில் கோட்டைவிட்டு விட்டதையும் மறுக்கமுடியாது. கட்சியை வைத்து சம்பாதித்தவர்கள், செலவுக்குப் பயந்து எதையும் செய்யவில்லை. மாவட்ட கட்சி அலுவலத்துக்கு இபிஎஸ் வந்தபோதுகூட எதிர்பார்த்த கூட்டம் இல்லை.
கடந்த முறை கோவை மாவட்டத்தின் பத்து தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வென்றதுக்கு எஸ்.பி.வேலுமணியின் களப்பணியும் கோவைக்கு அவர் கொண்டு வந்த திட்டங்களும் தான் காரணம். அதேபோல், இம்முறையும் திட்டமிட்டு பணிகளை தொடங்கி இருக்கும் வேலுமணி, தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்தி முடித்து பூத் கமிட்டிகளையும் முழுமையாக அமைத்து முடித்திருக்கிறார். திண்ணைப் பிரச்சாரங்களின் மூலம் வாக்காளர்களைச் சந்தித்து இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துரைக்க வேண்டும் என தொண்டர்களை விரட்டிக் கொண்டே இருக்கிறார் வேலுமணி. ஆனால், தேர்தல் பணிகளில் அவர் காட்டும் தீவிரத்தை மற்ற நிர்வாகிகள் காட்டுவதில்லை.
அதிமுக எம்எல்ஏ-க்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக தொகுதிப் பக்கமே எட்டிப் பார்க்காமல் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பொதுச்செயலாளர் வருகையை சீரியஸாக எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. மெத்தனமாக இருக்கும் கோவை மாவட்ட நிர்வாகிகள் மீது இபிஎஸ் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இம்முறை பத்துக்குப் பத்து வெற்றி சாத்தியமில்லாமல் போய்விடும்” என்றனர்.
இதுதொடர்பாக கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரான அம்மன் அர்ச்சுனன் எம்எல்ஏ-விடம் கேட்டதற்கு, “இபிஎஸ்ஸுக்கு கட்சியினர் மட்டுமல்லாது பொதுமக்களும் தன்னெழுச்சியாக வந்து வரவேற்பளித்தனர். கோவையில் தொடங்கிய அந்த எழுச்சி தமிழகம் முழுவதும் தொடர்கிறது. வடவள்ளியில் கூட்டம் நடத்தப்பட்ட இடமானது அகலமான ஏரியா என்பதால் மக்கள் ஆங்காங்கே பரவலாக நின்றனர். மற்றபடி கூட்டம் கூடாமல் எல்லாம் இல்லை” என்றார்.
கோவை ரெஸ்பான்ஸை பார்த்துவிட்டு மற்ற மாவட்டச் செயலாளர்களுக்கு தலைமையிலிருந்து கண்டிப்பான உத்தரவுகள் பறந்ததாகச் சொல்கிறார்கள். இதையடுத்து அந்தந்த மாவட்ட முன்னாள் மாண்புமிகுக்கள் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி கூட்டத்தைக் கூட்டினார்களாம்.