கரூர்: வருங்காலத்தில் இதுபோன்ற பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் பலியான நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனிடையே, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த உடற்கூராய்வுக் கூடத்துக்கு வந்த போது உயிரிழந்தவர்ளின் உறவினர்கள் சீமானை உள்ளே அனுமதிக்காமல் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து போலீஸார் உறவினர்களை சமாதானம் செய்து சீமானை அஞ்சலி செலுத்த அனுமதித்தனர்.
மேலும், காயமடைந்தவர்களை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: ”எதிர்பாராத விதமாக நடந்த வேதனையை உண்டாக்கும் மோசமான சம்பவம். இனி பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை படிப்பினையாக எடுத்துக் கொண்டு வருங்காலங்களில் தவறு நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அதனைக் கடந்து வர வேண்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்” என்று கூறினார்.