‘இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக்கூடாது’ என்று மயிலாப்பூர் அகாடமி பவள விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
‘தி மயிலாப்பூர் அகாடமி’யின் பவளவிழா கொண்டாட்ட நிகழ்ச்சி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு பவளவிழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
கலை, சமூக சேவை, கல்வி, மருத்துவம், அரசு பணி உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார். பரத நாட்டிய கலைஞர்கள் வி.பி.தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், ‘ரீச்’ பவுண்டேஷன் அறங்காவலர் டாக்டர் நளினி கிருஷ்ணன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: தாய், தாய் மொழி, தாய் நாடு – இந்த மூன்றையும் யாரும் ஒருபோதும் மறக்கக்கூடாது. நம்மால் எத்தனை மொழிகள் கற்க முடியுமோ அத்தனை மொழிகளையும் கற்கலாம். அது தெலுங்கு, மலையாளம், கன்னடம், மணிப்பூரி, இந்தி என எந்த மொழியாகவும் இருக்கலாம்.
ஆனால், தாய் மொழியை மதிக்க வேண்டும். எந்த மொழியையும் யார் மீதும் திணித்துவிட முடியாது. தமிழ்ச் சமூகம் பாரம்பரியமும் மூத்தோருக்கு மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட உன்னத சமூகம். நாம் நமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், உயர் மதிப்பீடுகளையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.
மேற்கத்திய சமூகம் வன்முறை கொண்டது. சமீப காலமாக அதன் தரம் குறைந்துகொண்டே செல்கிறது. இந்திய பொருளாதாரம் இறந்த பொருளாதாரம் என எந்த அதிபராவது இதுவரை சொல்லியிருக்கிறார்களா? ஆனால் தற்போதைய அதிபர் இவ்வாறு சொல்லியிருக்கிறார். அமெரிக்கா மிகப்பெரிய ஜனநாயக நாடு. அதன் மீது நமக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால், இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக்கூடாது.
இன்றைய தினம் அமெரிக்காவில் உயர் பொறுப்புகளில் இந்தியர்கள் குறிப்பாக, தென்னிந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். காரணம் அவர்களின் திறமை. இந்திய இளைஞர்கள் திறமைசாலிகள். தற்போது நம் நாட்டின் வளர்ச்சி விகிதத்தைப் பார்க்கும்போது விரைவில் இந்தியப் பொருளாதாரம் 3-வது இடத்துக்கு அல்ல 2-வது இடத்துக்கே முன்னேறும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
டி.எஸ்.திருமூர்த்தி பேசும்போது, “மயிலாப்பூர் அகாடமிக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனது தாத்தா திருமூர்த்தி அதன் முதல் தலைவராக பணியாற்றியவர். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் சிறந்த ஓவியத்துக்காக மயிலாப்பூர் அகாடமியின் பரிசைப் பெற்றிருக்கிறேன். இந்த அமைப்பு கடந்த 75 ஆண்டு காலமாக சமூகத்துக்கு அளப்பறிய சேவைகளை ஆற்றி வருகிறது. அதற்கு பாராட்டுகள். நான் அறிந்தவரை, ஓட்டுநர், நடத்துநர், தீயணைப்பாளர் போன்ற அடிப்படை பணியாளர்களைக் கவுரவித்து விருது வழங்கக்கூடிய ஒரே அமைப்பு மயிலாப்பூர் அகாடமியாகத்தான் இருக்கும்” என்றார்.
முன்னதாக, மயிலாப்பூர் அகாடமியின் தலைவர் நீதிபதி எஸ்.ஜெகதீசன் வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக அகாடமியின் துணைத் தலைவர் நல்லி குப்புசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சியை செயலாளர் கே.ஜெ.சூரியநாராயணன் தொகுத்து வழங்கினார்.