செய்யூரில் புதிய தீயணைப்பு நிலைய கட்டிடத்துக்கு ரூ.2.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதால், விரைவாக பணிகளை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள், சிப்காட் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால், மேற்கண்ட வட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளை சார்ந்துள்ளனர்.
இந்நிலையில், மேற்கண்ட வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபடுவதற்கான, தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இங்கு பல்வேறு வசதிகள் இல்லாததால் நவீன வசதிகளுடன் கூடிய புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் அமைக்க வேண்டும் என செய்யூர் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக செய்யூரில் 61 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், நிலம் ஒதுக்கியும் புதிய கட்டிடங்கள் அமைக்க நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டதால், கட்டிடம் அமைக்கும் பணிகள் கிடப்பில் இருந்தன.
இந்நிலையில், புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க ரூ.2.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டதன்பேரில், கட்டிடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என அனைவரும் காத்திருந்த நிலையில், பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால், தீயணைப்பு நிலைத்தின் அவசியம் கருதி கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்யூர் சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, செய்யூர் கிராம மக்கள் கூறியதாவது: மேற்கண்ட தீயணைப்பு நிலையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, சுற்றுப்புற கிராம மக்களின் பாதுகாப்பு கருதி புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளை விரைவாக தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வட்டாரங்கள் கூறியதாவது: செய்யூர் தீயணைப்பு நிலையத்தின் புதிய கட்டிடம் அமைக்கும் பணிகளை ஒப்பந்ததாரரர் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.