சென்னை: தமிழகத்தில் பிரிவினை பேசும் பல குரல்கள் எழுகின்றன. இது கண்டிக்கத்தக்கது. இங்கு பெரியபுராணம்தான் அதிகம் பேசப்பட வேண்டும். பெரியார்புராணம் அல்ல என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடிக்கு புறப்படும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை நேற்று கூறியதாவது: நாட்டின் ஒற்றுமைக்கு மிக பெரிய பாதகம் ஏற்படுத்தும் அளவுக்கு, தமிழகத்தில் பிரிவினை பேசும் பல குரல்கள் எழுகின்றன. இது கண்டிக்கத்தக்கது. இங்கு பெரியபுராணம்தான் அதிகம் பேசப்பட வேண்டும். பெரியார்புராணம் அல்ல. நமது சோழ மன்னர்கள் ஆன்மிகத்தோடுதான் படை பலத்தை வளர்த்தனர். காவி தமிழ்தான் இங்கு அதிகம் வளர்க்கப்பட்டது.
தமிழகம் பற்றி முதல்வர் ஸ்டாலின் சிந்திப்பதைவிட, பிரதமர் மோடி அதிகம் சிந்திக்கிறார். ‘வீடு வீடாக சென்று, பாஜக நிதி தரவில்லை என்பதை கூறுங்கள்’ என்றார் ஸ்டாலின். அதேபோல, பிரதமர் மோடி இப்போது ரூ.4,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்பதையும் வீடு வீடாக சென்று கூறுங்கள்.
செந்தில் பாலாஜியின் தம்பி, வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெறுகிறார். வேறு பல அரசியல்வாதிகளும் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கோ, தனியார் மருத்துவமனைகளுக்கோ செல்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி, அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வருவோர் அனைவருக்கும் ஒரேமாதிரியான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
‘கிட்னி திருட்டு எதுவும் நடக்கவில்லை. அது முறைகேடு’ என்கிறார் சுகாதார துறை அமைச்சர். வீடு புகுந்து பொருட்களை திருடி செல்வது திருட்டா, முறைகேடா? பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயர்கள்தான் நீக்கப்படுகின்றன. இதற்கு திமுக ஏன் பதற வேண்டும். தமிழகத்திலும் தவறான பெயர்கள் நீக்கப்பட்டு, முறையான வாக்காளர் பட்டியல் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.