நீலகிரி மாவட்ட திமுக-வில் இப்போது பவர்ஃபுல் சக்தியாக இருப்பவர் எம்பி-யும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா தான். தான் ஊரில் இல்லாத நேரங்களிலும் தொகுதி மற்றும் கட்சி சார்ந்த விஷயங்களைக் கவனித்துக் கொள்வதற்காக தனது அக்காள் மகன் பரமேஸ்குமாரை ஊட்டியில் நிரந்தரமாக உட்கார வைத்திருக்கிறார் ஆ.ராசா. ஆனாலும் உட்கட்சி உள்குத்துகளை தவிர்க்க முடியாத சூழல் தான் ஊட்டியிலும் நிலவுகிறது.
நீலகிரி மாவட்ட அரசியலுக்கு ஆ.ராசா வருவதற்கு முன்னதாகவே முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரனும் முன்னாள் அரசு கொறடா பா.மு.முபாரக்கும் திமுக-வில் இரு துருவ அரசியலை தொடங்கிவிட்டார்கள். மாவட்டச் செயலாளராக முபாரக் இருந்தும் கடந்த முறை அவருக்கு சீட் கொடுக்காத திமுக தலைமை குன்னூரில் கா.ராமச்சந்திரனுக்கு சீட் கொடுத்தது. ராமச்சந்திரன் வெற்றி பெற்றதால் அவர் வனத்துறைக்கும் அமைச்சரானார்.
அமைச்சரானதால் முபாரக்கின் கை சற்றே தாழ்ந்து ராமச்சந்திரனின் கை ஓங்கியது. இதனால் இயல்பாகவே இரண்டு தரப்பும் கோஷ்டி அரசியலில் கொடிகட்டிப் பறந்தன. இந்த நிலையில், தலைமைக்கு யார் என்ன புகாரை தட்டிவிட்டார்களோ தெரியவில்லை… வனத்துறையிலிருந்து சுற்றுலாத்துறைக்கு அமைச்சராக்கப்பட்டார் ராமச்சந்திரன்.
அப்போதும் முறுக்குவதை விடாத முபாரக் கோஷ்டி, ராமச்சந்திரனை ஒரேயடியாக அமைச்சரவையிலிருந்து தூக்குவதற்கு என்னென்ன ‘நல்ல’ காரியங்களைச் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்தது. இதனால் தலைவலியை தாங்கமுடியாத திமுக தலைமை, கடந்த ஆண்டு ராமச்சந்திரனை அமைச்சரவையிலிருந்து நீக்கி அரசு கொறடாவாக அமரவைத்தது.
ராமச்சந்திரனை வீழ்த்த முபாரக் கோஷ்டியினர் என்னவெல்லாம் செய்தார்களோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில் முபாரக்கை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தூக்குவதற்கான வேலைகளை சமயம் கிடைக்கும் போதெல்லாம் செய்து வந்தது ராமச்சந்திரன் கோஷ்டி.
இதையடுத்து, கிட்டத்தட்ட 11 ஆண்டு காலம் மாவட்டச் செயலாளராக கோலோச்சி வந்த முபாரக்கிற்கு கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வுகொடுத்த திமுக தலைமை, அவருக்குப் பதிலாக இளையவரான தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.எம்.ராஜுவை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தது. ராஜு கொறடா ராமச்சந்திரனின் விசுவாசியாக அடையாளப்படுத்தப் பட்டதால் அவருக்கும் இப்போது குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நீலகிரி மாவட்ட திமுக-வினர், “2021 தேர்தலில் ஆ.ராசா களத்தில் இருந்தும் கோஷ்டி அரசியலால் தான் திமுக கோட்டையான கூடலூர் தொகுதி சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கைக்கு போனது. அப்படியும் இவர்கள் திருந்தியபாடில்லை என்பதால் தான் ராமச்சந்திரனும் வேண்டாம் முபாரக்கும் வேண்டாம் என்று முடிவெடுத்து அவர்களை டம்மியாக்கிவிட்டு ராஜூவை மாவட்டச் செயலாளராக்கியது தலைமை.
ஆனால், ராஜூவையும் செயல்பட விடாமல் தடுக்கிறார்கள். தலைமைக்கு நெருக்கமான ஆ.ராசா இங்கிருப்பதால் அவரை மீறியும் ராஜூவால் எதுவும் செய்யமுடியவில்லை. மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் இம்முறை திமுக ஜெயிக்க வேண்டும் என்றால் ராஜூவுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் கொஞ்சமாவது அவரை சுதந்திரமா செயல்படவிடணும்” என்றனர்.
மாவட்ட திமுக பொறுப்பாளரான கே.எம்.ராஜூவிடம் இது குறித்து பேசினோம். “நான் நீண்ட காலமாக திமுக-வுக்காக உழைத்து வருகிறேன். அதை அங்கீகரிக்கும் விதமாகத்தான் தலைமை என்னை மாவட்டப் பொறுப்பாளராக்கி இருக்கிறது. தலைமை என்மீது வைத்துள்ள நம்பிக்கை பொய்க்காத வகையில் அனைவரையும் ஒருங்கிணைத்து இம்முறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை ஜெயிக்க வைப்பது மட்டுமே இப்போது எங்களின் ஒரே இலக்கு” என்றார் அவர்.