மதுரை: சிவகங்கை ஆவின் திருப்புவனத்தில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் இருப்பதால் மதுரையில் அரசுத் துறையில் பணி வழங்க வேண்டும் என மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் சகோதரர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் நீதிமன்றம் வந்திருந்தார். விசாரணை முடிந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அஜித்குமார் காவல் மரணம் வழக்கின் சாட்சிகளுக்கு திருப்புவனம் காவல் நிலையத்திலிருந்து அச்சுறுத்தல் அளிக்கப்படுகிறது. இதனால் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கேட்டோம். சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனக்கு சிவகங்கை ஆவினில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆவின் அலுவலகம் திருப்புவனத்தில் இருந்து 80 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே மதுரையில் ஏதேனும் ஒரு அரசுத் துறையில் பணி வழங்க வேண்டும். இது குறித்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கு அரசுத் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
தமிழக அரசால் வளர்ச்சியடையாத பகுதியில் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இடம் ஓதுக்கீடும் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. உயர் அதிகாரிகளின் அழுத்தம் இல்லாமல் அஜித்குமார் கொலை சம்பவம் நடந்திருக்காது. எனவே காவல்துறை உயர் அதிகாரிகளையும் விசாரித்து தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். சித்திரவதையால் இறந்து போன எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அஜித்குமார் வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நவீன்குமாருக்கு ஆவினில் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆவின் பணி அரசுப் பணியல்ல எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ஆவின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் தான் என்றனர்.