சென்னை: ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் நேற்று பூஜைப் பொருட்களை வாங்குவதற்காக திரண்ட பொதுமக்களால் கடைவீதிகள் மற்றும் முக்கிய சந்தைகள் களைகட்டின. நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேடு, பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சந்தைகள் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது.
குறிப்பாக, ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் அக்.5-ம் தேதி வரை சிறப்பு சந்தை நடைபெறுகிறது. இதில் பொறி, கடலை, வாழைப்பழம், இலை, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்ய தனியாக ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கும் அமோகமாக விற்பனை நடைபெற்றது.
அதேநேரம், பொருட்கள் மற்றும் பூக்களின் விலை வழக்கத்தைவிட அதிகரித்திருந்தது. அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.600-ல் இருந்து 800-ஆகவும், முல்லை 500-ல் இருந்து ரூ.700-ஆகவும், கனகாம்பரம் 400-ல் இருந்து 800-ஆகவும், அரளி பூ ரூ.200-ல் இருந்து 350-ஆகவும், சாமந்தி ரூ.100-ல் இருந்து 180-ஆகவும், சம்மங்கி ரூ.100-ல் இருந்து 200-ஆகவும் உயர்ந்து விற்பனையானது.
சில்லறை வியாபாரிகளும் கடைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். இதேபோல், வாட்டர் வாஷ் செய்வதற்கும் மெக்கானிக் ஷாப்களில் ஏராளமான வாகனங்கள் குவிந்த வண்ணம் இருந்தன. சுண்டல் உள்ளிட்ட பதார்த்தங்களைச் செய்வதற்கான பொருட்களை வாங்க மளிகை கடைகளிலும் கூட்டம் குவிந்தது.
குறிப்பாக, மாலை நேரங்களில் இறுதி நேர வியாபாரம் களைகட்டியது. இவ்வாறு பொருட்களை வாங்கிச் செல்ல ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்த நிலையில், அலுவலகம் முடிந்து வீடு செல்வோர், பண்டிகைக்காக ஊர்களுக்குச் செல்வோர் என அணிவகுத்ததால் முக்கிய சாலைகளிலும், புறநகர் பிரதான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு, நெரிசலை சீர் செய்தனர்.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்: கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்கு வந்தவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாரத்தின் இடையில் ஆயுதபூஜை வந்தபோதும், அதைத் தொடர்ந்து காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை இருப்பதால் பலரும் ஊர்களுக்கு பயணிக்க திட்டமிட்டதால் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்தவர்கள் சம்பந்தப்பட்ட பேருந்திலும், அண்டை மாவட்டங்களில் வசிப்போர் மற்றும் முன்பதிவு செய்யாமல் வந்தவர்கள் பேருந்துக்காக காத்திருந்து பயணித்தனர்.
முன்னதாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்குமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதோடு, சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து பயணிகளிடமும் கேட்டறிந்தார். மெட்ரோ ரயில்களிலும் நேற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.