கரூர்: கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கரூரில் நேற்று முன்தினம் இரவு தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 40 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து காரில் கரூர் சென்றார்.
பின்னர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேற்று அதிகாலை 3.15 மணி அளவில் அஞ்சலி செலுத்தினார். காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: மிகுந்த துயரத்தோடு, கனத்த இதயத்துடன், விவரிக்க முடியாத வேதனையில் இருக்கிறேன். நெரிசலில் சிக்கி பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக செய்தி கிடைத்தவுடன், ஆட்சியர் தங்கவேல், எம்எல்ஏ செந்தில் பாலாஜி ஆகியோரை தொடர்பு கொண்டு, உடனடியாக மருத்துவ உதவிகளை அளிக்க உத்தரவிட்டேன்.
உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், அமைச்சர்கள் அன்பில் மகேஸ், மா.சுப்பிரமணியன் ஆகி யோரையும் கரூருக்கு அனுப்பி வைத்தேன். அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோருடன் ஆலோசனை நடத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். இங்கு காலையில் வரலாம் என திட்டமிட்ட நிலையில், தொடர்ந்து வந்த செய்திகள் மனதை கலங்கடித்ததால், மனது கேட்கவில்லை. வீட்டில் இருக்க முடியாமல், உடனடியாக புறப்பட்டு வந்துவிட்டேன்.
அரசியல் கூட்டத்தில் இதுவரை நடக்காத சம்பவம். இனியும் இதுபோல நடக்கக் கூடாது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 51 பேர் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன்.உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினேன். அவர்களது குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் கூறி தேற்றுவது என தெரியவில்லை. நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுளேன். தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். அரசியல் நோக்கத்தோடு பதில் அளிக்கவிரும்பவில்லை. ஆணையத்தின் அறிக்கையை விரைவில் பெற்று, அதன் அடிப்படையில் உரியநடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.
அக்கறையுடன் விசாரித்த ராகுல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி’என்று தெரிவித்துள்ளார்.