திருச்சி: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் கொடுப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்; என்று தலைப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை அன்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பேசியது:
“திருச்சி மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் 1000 கோடி ரூபாய் நிதி வழங்கி, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சி மாநகராட்சியில் மின்கட்டணம் 67% உயர்வு, வரிகளையும் 100 முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசு.
விலைவாசியல் மக்கள் படும் துன்பம் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் அரிசி, பருப்பு, எண்ணெய் என்ன விலை… இப்போது என்ன விலை என்று ஒப்பிட்டுப் பாருங்கள். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் ஒதுக்கி, அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்களுக்காக திமுக ஆட்சி செய்யவில்லை, வீட்டு மக்களுக்காக ஆட்சி செய்கிறது. இந்த குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல் இது. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பேசவில்லை, யதார்த்த உண்மையைச் சொல்கிறேன். திமுக குடும்பத்தைத்தான் அரசாங்கமாகப் பார்க்கிறார்கள்.
நாடு சிறந்து வளர கல்வி வளர்ச்சி முக்கியம். எனவே அதிகமாக நிதி ஒதுக்கி கல்வியில் புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தினோம். அதிமுக ஆட்சியில்தான் கற்போர் எண்ணிக்கை அதிகரித்தது. அதிமுகவின் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுகவினால் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாவது கொண்டுவர முடிந்ததா?
67 கலைக்கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி, 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம் என பல கல்லூரிகளைத் திறந்து இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை 2019-லேயே அடைந்தோம்.
ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், புத்தகப்பை, சைக்கிள், விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மாவின் எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம் லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் ரூ.7300 கோடி நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் தாராளமாக கிடைக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள், நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் போதை மாநிலமாக உருவாகிவிட்டது. மாணவர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலினே ஒப்புக்கொண்டுவிட்டார்.
இன்றைக்கு, ‘போதையின் பாதையில் செல்லாதீர்கள்’ என்று முதல்வர் பேசுகிறார். நாங்கள் சொன்னபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. துணை முதல்வரும் போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கிறாராம், எல்லாரும் கெட்டு முடிந்தபிறகு, இப்படி நாடகம் போடுகிறார்கள். போதைக்கு அடிமையானவர்களால்தான் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை நடக்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது இவை எல்லாமே சரி செய்யப்படும்.
கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து அதனை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.
ஏழைப் பெண்களின் பொருளாதார சூழலால் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் 6 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுசேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். ஏழைகளுக்கான திட்டங்களை நிறுத்தியதில் தான் திமுக சாதனை படைத்திருக்கிறது. மீண்டும் அந்த திட்டங்கள் எல்லாம் தொடரும்.
கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இனி ஏழை மக்கள் வீடு கட்டவே முடியாத அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது. இரவில், கனவில் வேண்டுமானால் வீடு கட்டலாம். தேர்தல் அறிக்கையில் கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்போது அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் அவற்றை இணைப்பேன் என்றனர், ஆனால் செய்யவில்லை. ஏனெனில் எல்லாவற்றில் இருந்தும் கமிஷன் வருகிறது. காசு வந்தால் திமுகவுக்கு போதும்.
சமீபத்தில் எங்களுக்குக் கிடைத்த செய்தி, ஜல்லி, எம்.சாண்ட் உரிமையாளர்களிடம் ஒரு டன்னுக்கு 100 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் வாய்மொழி உத்தரவிட்டதாகத் தகவல். எப்படி மக்களால் இதை தாக்குப்பிடிக்க முடியும்? இந்த ஆட்சி மீண்டும் வரப்போவதில்லை என்பது அவர்களுக்கே தெரிந்துவிட்டது, எரிகிற வீட்டில் பிடுங்குவது மிச்சம் என்று கொள்ளையடித்து வருகின்றனர்.
நான் முதல்வரானபோது, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி பெரும்பான்மை நிரூபிக்கும் நாளன்று சட்டமன்றத்தில் கூச்சல் போட்டு டேபிளில் ஏறி டான்ஸ் ஆடினார்கள். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தனர். பெரும்பான்மை நிரூபித்த பின் அதனை ஏற்றுக்கொள்ளாத ஸ்டாலின் சட்டையைக் கிழித்துவிட்டு நடந்தார். அதிமுக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அப்போது சட்டையுடன் வேட்டியையும் கிழித்துக்கொண்டு சாலையில் நடக்கப்போகிறார்.
கரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் என 7 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு கொடுத்தோம். தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம். கரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம்.
அதிமுக அரசு அமைந்ததும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கையை ஏற்று, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ரூ.75 ஆயிரம் மானியமாக கொடுக்கப்படும்.
சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். ரமலானுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5400 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தோம், நாகூர் தர்காவுக்கு சந்தனக் கட்டை கொடுத்தோம், ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் 12 கோடி ரூபாய் கொடுத்தோம்.
சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம், ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்கள், மோதினார்களுக்கு ஓய்வூதியம் அதிகரித்தோம், உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம், வக்ஃபு வாரியத்துக்கு ஆண்டு மானியம், பள்ளிவாசல் தர்கா புனரமைப்பு நிதி வழங்கினோம், இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிட்டோம்.
டெல்டா கனமழையில் நாகூர் தர்கா குளக்கரையை சரிசெய்ய நானே நேரில் பார்வையிட்டு ரூ.4 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்தேன். சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தோம், மறைந்த அப்துல் கலாம் நினைவாக கலை அறிவியல் கல்லூரி ராமேஸ்வரத்தில் தொடங்கினோம், திண்டுக்கல்லில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி வாழ்க்கை வரலாறு மணிமண்டபம் அமைத்தோம். கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைத்தோம், இவற்றை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.
இதே போல கிறிஸ்தவ மக்களுக்கு, கிறிஸ்தவ பெண்கள் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கினோம், தேவாலய புனரமைப்பு நிதியை 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கினோம், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு 38 ஆயிரமாக நிதியுதவி உயர்த்தி வழங்கினோம், பின்னர் முழு மானியம் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து அதனைச் செய்யவில்லை. கிறிஸ்தவ அருட்சகோதரிகளுக்கு ஜெருசலம் புனிதப் பயணத்துக்கு தனி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிறுபான்மை மாணவர் கல்வி உதவித் தொகை ஆண்டுதோறும் முழுமையாக வழங்கப்பட்டது. 10 ஆண்டுகளில் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த 37 லட்சத்து 16 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.884 கோடி கல்வி உதவித் தொகை வழங்கினோம். சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட முழு ஒத்துழைப்பு வழங்கினோம்.
கிறிஸ்தவ, இஸ்லாமியப் பெருமக்களுக்கு முழு பாதுகாப்பு கொடுத்தது அதிமுக அரசு. 31 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மத, ஜாதி சண்டை இல்லை, தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது.
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பலதிட்டங்களை நிறைவேற்றினோம், திருச்சி மலைக்கோட்டை நுழைவுவாயிலை சீரமைப்பு செய்தோம், புராதன தன்மையுடன் பூங்கா 39 கோடியில் தொடங்கினோம். திருச்சி மாநகரில் 16 பூங்காக்களை உருவாக்கினோம், வெள்ள பாதிப்பைத் தடுக்க உய்யகொண்டான் கால்வாய் 18 கோடியில் சீரமைக்கப்பட்டது.
திருச்சி மாநகரில் எல்.இ.டி மின்விளக்குகள் பொருத்தப்பட்டது, சத்திரம் பேருந்து நிலையம் 28 கோடியில் மேம்படுத்தப்பட்டது. 19 கோடியில் பன்னாட்டு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது, 90% பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டி திறக்கப்பட்டது. திருச்சியில் பழைமையான தண்ணீர் தொட்டிகள், குழாய்களை சீரமைக்க அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டு, தற்போது அத்திட்டம் 2014 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இதுவும் அதிமுக ஆட்சியில்தான் ஆரம்பிக்கப்பட்டது.
மறைந்த தியாகராஜ பாகவதருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டது, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஆரம்பிக்கப்பட்டு 90% பணிகள் முடிவடைந்து, திமுக ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டி திறக்கப்பட்டது. மறைந்த வ.உ.சி.க்கு மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்தார். அதிமுக ஆட்சியில் தான் தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
நீங்கள் கொடுத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதிமுக போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திலும் கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டால் அவர்களின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்” என்று தெரிவித்தார்.