சென்னை: மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டதால் நானும் ஓய்வெடுக்க போவதில்லை.; உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி பிரச்சனைகளை களையவும், மக்கள் குறைகளை தீர்க்கவும் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின், ‘தாயுமானவர் திட்டம்’ ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறோம். நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நமது செல்வாக்கு அதிகரித்துள்ளது. நாள்தோறும் கட்சி நிர்வாகிகள் மக்களை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
தற்போது பாஜக அரசு தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் என்னென்ன அட்டூழியங்களை பிஹாரில் மேற்கொண்டு வருகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு கடந்த ஆண்டுகளில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, அங்குள்ள முதலீட்டாளர்களுடன் பேசியதன் விளைவாக தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் கொண்டுவரப்பட்டு, பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை தொடங்கி உள்ளன.
அதன் காரணமாக சுமார் 30 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெருகி உள்ளது. மத்திய அரசு வெளியிட்ட தகவல்படி இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழகம்தான். வரும் செப்டம்பர் மாதம் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வர உள்ளேன்.
வரும் நாட்களில் திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், தமிழகத்தின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும் என்பதை உறுதியாக சொல்லி கொள்கிறேன். நானும் ஓய்வெடுக்க போவதில்லை. உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை. மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது முழு வீச்சுடன் பணியாற்றிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தீர்மானங்கள்: முன்னதாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொது செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்பு செயலாளர்கள் ஆஸ்டின், தாயகம் கவி, மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில், அந்த வாக்காளர் பட்டியலை துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது.
தேர்தல் ஜனநாயகத்தை சிதைக்கும் பிஹார் சிறப்பு தீவிர திருத்தத்தினை எதிர்த்து திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்த நிலையிலும், உச்ச நீதிமன்றமே எச்சரித்த பிறகும் அம்மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை, தன்னிச்சையாக தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.
பாஜக அரசும் இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரு சார்பான நடவடிக்கைகளுக்கு இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. தேர்தலை நடத்துவது மட்டுமல்ல, அதற்கான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதும் தன்னாட்சிபெற்ற அமைப்பிடம் இருக்க வேண்டும் என அரசியல் சட்டத்திலேயே தேர்தல் ஆணையத்துக்கு முழு பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வு குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டபிறகு, தேர்தல் நடத்துவதில் மட்டுமல்ல, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதிலும் தேர்தல் ஆணையம் அரசியல் சாயம் பூசி கொண்டு, பாஜக அரசுடன் கைகோத்து நிற்பது ஜனநாய கத்தை கேள்விக்குரியதாக ஆக்குவது கவலையளிக்கிறது.
தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகளை தொடங்கும் முன்பே சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து உறுதிப்படுத்தும் பணியை தேர்தல் ஆணையம் நிறைவேற்றிட வேண்டும். இவ்வாறு இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.