சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, சென்னையில் கடற்கரை, கோயில் தெப்பக்குளம் உட்பட பல்வேறு நீர்நிலைகளில் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். முன்னோர் வழிபாட்டுக்கு உகந்தநாளாக அமாவாசை கருதப்படுகிறது. அதிலும், ஆடி, புரட்டாசி (மகாளயம்), தை மாதங்களில் வரும் அமாவாசை நாள், கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.
ஆடி அமாவாசை நாளில் புனித நீராடி, முன்னோருக்கு எள் மற்றும் அரிசி மாவால் செய்யப்பட்ட பிண்டங்களை வைத்து தர்ப்பணம் செய்வது, அவர்களின் ஆசிகளைப் பெற்று குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.
ஆதரவற்றவர்களுக்கு உணவு: இந்நிலையில், ஆடி அமாவாசையான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் ஏராளமானோர் திரண்டு, முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் அதிகாலை முதலே ஏராளமானோர் திரண்டனர். கடலில் நீராடிவிட்டு, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, சூரிய பகவானை வழிபட்டனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் தெப்பக்குள கரைகளிலும் காலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதற்கான சடங்குகளை புரோகிதர்கள் செய்து வைத்தனர். பலரும் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். வீடுகளில் முன்னோரின் படங்களுக்கு முன்பு படையலிட்டு வழிபாடு செய்தனர். மேலும் பலர் ஆதரவற்றவர்களுக்கு உணவு, ஆடை உள்ளிட்டவற்றை வழங்கினர்.