சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளான ஆக.17-ம் தேதி, தமிழர் எழுச்சி நாளாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருமாவளவனின் 63-வது பிறந்தநாளை சென்னை, காமராஜர் அரங்கில் ஆக.16-ம் தேதி (நாளை) கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆக.16-ம் தேதி மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை விழா நடைபெறவுள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு ஸ்டீபன் ராயல் குழுவினரின் இசைப்பாய்ச்சல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு ஜாஹிர் உசேன் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, ‘மதச்சார் பின்மை காப்போம்’ தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.
இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், கவிஞர் விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம்பன், தஞ்சை இனியன், அருண் பாரதி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்கேற்கின்றனர். விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வரவேற்புரையாற்றுகிறார்.
வாழ்த்தரங்கம் இரவு 11 மணிக்குத் தொடங்குகிறது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் ஐ.லியோனி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வே.வனிதா, திரைப்பட இயக்குநர் லட்சுமி ராம கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். இவ்விழாவுக்கு, விசிக பொதுச்செயலாளர்கள் ம.சிந்தனைச் செல்வன், துரை.ரவிக்குமார், எம்எல்ஏ-க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.