சென்னை: உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையையும் மீறி டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை தீர்ப்பாயம் மீண்டும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகத்துக்கும் சீல் வைத்தனர்.
அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஜூன் 20 அன்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “இந்த வழக்கில் எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த பின்னரும், ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறை தீர்ப்பாய அதிகாரி கடந்த ஜூலை 11 அன்று நோட்டீஸ் பிறப்பித்துள்ளார். இந்த நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், “உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கும் முன்பாகவே மனுதாரரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தீர்ப்பாயத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அந்த பொருட்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கலாமா அல்லது மனுதாரரிடம் திருப்பி கொடுக்கலாமா என்பது குறித்து தீர்ப்பாயம்தான் முடிவு செய்யும். அதற்காகவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது” என்றார்.
அதையேற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அமலாக்கத் துறை ஒவ்வொரு முறையும் இதுபோல செயல்பட்டதால்தான் இடைக்காலத் தடையே விதித்தோம். ஏற்கெனவே அமலாக்கத் துறை தரப்பில் டெல்லியில் இருந்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும் ஆஜராகியிருந்தார். தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பினால் அதை ஏற்க முடியாது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமலாக்கத் துறை வேண்டுமென்றே மீறியிருப்பது கண்டனத்துக்குரியது.
மனுதாரர் விரும்பினால் அவமதிப்பு வழக்கு தொடரலாம். ஏற்கெனவே நிலுவையில் உள்ள பிரதான வழக்கு வரும் ஆக.6 அன்று விசாரணைக்கு வருகிறது. எனவே அதற்குள் இதுதொடர்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.