சென்னை: சென்னையில் இந்தாண்டு இதுவரை அவசர உதவி கோரி 69,628 அவசர அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு வந்த 5 நிமிடங்களில் சம்பவ இடம் விரைந்து போலீஸார் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர்.
இக்கட்டான சூழலில் சிக்கி இருந்தாலோ, அவசர உதவி தேவை என்றாலோ பொது மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை உடனடியாக தொடர்பு கொள்கின்றனர். இப்படி தொடர்பு கொள்பவர்களுக்கு அடுத்த 5 நிமிடத்துக்குள் ரோந்து போலீஸார் நேரில் சென்று உதவி புரிகின்றனர். அந்த வகையில் கடந்த 18ம் தேதி கூட ஆழ்வார்பேட்டையில் பிரபலமான மருத்துவமனையில் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீஸார் காப்பாற்றினார்.
இப்படி, உடனடியாக சம்பவ இடம் விரையும் வகையில் சென்னையில் 234 ரோந்து வாகனங்கள் உள்ளது. இந்த வாகனங்கள் கூடுதலாக மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குற்றம் நடக்க வாய்ப்புள்ள பகுதிகளிலும் ரோந்து சுற்றி வருகின்றனர். இவர்கள் அவசர அழைப்புக்கான சம்பவ இடங்களுக்கு செல்கிறார்களா? ரோந்து பணிக்கு செல்கிறார்களா என போலீஸ் உயர் அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர்.
இதுஒருபுறம் இருக்க நடப்பு ஆண்டில் (2025) இதுவரை காவல் அவசர உதவி எண்.100 மூலம் 60,417 அழைப்புகளும், இதர காவல் உதவி எண்கள் (பெண்கள் உதவிமையம் (1091), முதியோர் உதவி மையம் (1253), பந்தம் (9499957575), காவல் கரங்கள் (94447-171700) உள்பட பல்வேறு அழைப்புகள் மூலம் மொத்தம் 69,628 அழைப்புகள் பெறப்பட்டு அவைகள் அனைத்துக்கும் போலீஸார் சம்பவ இடம் விரைந்து பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளனர். இப்படி, 5 நிமிடங்களில் இருந்து போக்குவரத்து சூழலைக் கொண்டு 10 நிமிடங்களுக்குள்ளாக நிகழ்விடம் விரைந்து தீர்த்து வைத்துள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.