காஞ்சிபுரம்: “அதிமுக இப்போது யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். பாவம்… அறியாமையின் காரணமாக பேசுவாதாக இதைப் பார்க்கிறேன்” என்று தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை தவெக மாநாட்டில் அதிமுக குறித்து விஜய் பேசியதற்கு, பதிலடி தரும் வகையில் தனது பிரச்சாரக் கூட்டத்தில் இன்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக மக்களுக்கு சேவை செய்ய தொடங்கப்பட்ட இயக்கம். தீயசக்தி திமுகவை வீழ்த்த இந்த கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் எண்ணத்தை நிகழ்த்திக் காட்டியவர் எம்ஜிஆர். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மறைந்தாலும் மக்கள் மனதில் பூமி உள்ளவரை நிலைத்து நிற்பார்கள். எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றியவர்கள்.
யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களும் நம் தலைவர்களை சொல்லித்தான் துவங்க முடியும். சிலர், அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். பாவம், அறியாமையில் பேசுகிறார்கள். இதுகூட தெரியாமல் கட்சிக்குத் தலைவராக இருந்தால், உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்?
இங்கிருக்கும் அவ்வளவு பேரும் அதிமுக தொண்டர்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசிவருகிறார்கள். அதிமுக அப்படியல்ல, ஏழை ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்குத் திட்டங்களைத் தீட்டி அதன்மூலம் ஏற்றம் பெற்ற கட்சி. மரம் உடனே வளராது, செடி வைத்து தண்ணீர் ஊற்றி பின்னர் தான் பூப்பூத்து காய்காய்த்து கனி கொடுக்கும். அப்படித்தான் ஓர் இயக்கமும், எடுத்தவுடனே எந்த இயக்கமும் மக்களுக்கு நன்மை செய்துவிட முடியாது.
எம்ஜிஆர் கட்சி தொடங்கி 5 ஆண்டு காலம் தன்னுடைய உழைப்பைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார். ஜெயலலிதாவும் அப்படித்தான், எடுத்தவுடன் முதல்வர் ஆகவில்லை. மக்களுக்கு உழைத்துதான் முதல்வரானார். அண்ணா எடுத்தவுடனே முதல்வர் ஆகவில்லை. நிறைய போராட்டங்களை சந்தித்தார். மொழிக்காக சிறை சென்றார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கு தன்னையே அர்ப்பணித்தார்.
நம் தலைவர்கள் எல்லாம் அர்ப்பணித்து வாழ்ந்து அதிமுகவை அடையாளம் காட்டிச் சென்றனர். அதனால்தான் அதிமுக நிறைய திட்டங்களைக் கொடுத்தது. தமிழகம் இந்தளவு உயர்ந்ததிருப்பதற்கு 31 ஆண்டுகள் மக்களுக்காக நாட்டுக்காக அதிமுக உழைத்ததுதான் காரணம்.
அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொடுத்திருக்கிறோம். கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார் ஜெயலலிதா, அதிக நிதி ஒதுக்கினார். அதிமுக ஆட்சியில்தான் நிறைய கல்லூரிகளைக் கொண்டுவந்து கல்வியை உயர்த்தினோம். 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து வரலாற்று சாதனை படைத்தோம். 67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல், வேளாண், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் என நிறைய கல்லூரிகளைத் திறந்த ஒரே அரசு அதிமுக அரசு.
ஏழை மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க அடித்தளமிட்டது அதிமுக அரசு. அது தெரியாமல் சிலர் கட்சி ஆரம்பித்த உடனே இமாலய சாதனை படைத்தது போல பேசுறாங்க, நாங்க அப்படியல்ல, இங்கிருப்பவர்கள் உழைப்பால் அடையாளம் காட்டப்பட்டவர்கள், உழைப்புதான் நிலைக்கும். தொழிலிலும், அரசியலிலும் உழைத்தால்தான் ஏற்றம் பெற முடியும், அதுவும் அதிமுகவில் மட்டும்தான், வேறு எந்தக் கட்சியிலும் வரமுடியாது.
மக்கள் செல்வாக்கு பெற்றதைப் போலவும், நாட்டுக்கு உழைத்தது போலவும், அவர்கள் வந்துதான் மக்களைக் காப்பாற்றப்போவது போலவும் சிலர் அடுக்குமொழியால் பேசிவருகிறார்கள். யாரென்று புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
நான் உங்கள் முன் பேசுகிறேன் என்றால் எனது அரசியல் வாழ்க்கை 51 ஆண்டு காலம். 1976-ல் கிளைக் கழகச் செயலாளராக பொறுப்பேற்றேன். அதிலிருந்து படிப்படியாக உயர்ந்து உங்கள் முன் நிற்கிறேன். இது உழைப்பால் நிற்கிறேன். சிலர் உழைப்பே கொடுக்காமல் பலனை எதிர்பார்க்கிறார்கள், அது நிலைக்காது. ஏனெனில், உழைப்புதான் நிரந்தரம்.
திமுகவை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே. தமிழகத்தில் அதிக உறுப்பினர் கொண்ட இயக்கம் அதிமுக. தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுக அரசு. பொன்விழா கண்ட கட்சி. ஆக, அதிமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” என்றார் பழனிசாமி.
விஜய் பேசியது என்ன? – முன்னதாக, “தமிழகத்தில் எம்ஜிஆர் ‘மாஸ்’ தலைவர். தனது எதிரியைக் கூட கெஞ்ச வைத்தவர் எம்ஜிஆர். ஆனால், அந்தக் கட்சியை இப்போது கட்டிக் காப்பது யார்? அது எப்படி இருக்கிறது. அந்தக் கட்சியின் அப்பாவி தொண்டர்கள் வேதனையில் தவிக்கிறார்கள். அதனால், என்ன வேஷம் போட்டுக் கொண்டு வந்தாலும் பாஜகவின் வித்தை இங்கே வேலைக்கு ஆகாது” என்று மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசினார்.