அரியலூர்: அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நீக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு, அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அரசு போக்குவரத்துக் கழகம் என்றுதான் பெயர் இருந்தது என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் என உள்ளது. தமிழ்நாடு என்ற பெயரைக் காணவில்லை என்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்துள்ளது. 2012-ம் ஆண்டு ஜெயலலிதா புதிய பேருந்துகளை தொடங்கிவைத்தபோதே அரசுப் போக்குவரத்துக் கழகம் என்றுதான் உள்ளது.
ஏனெனில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் என்பது நீண்ட பெயராக இருப்பதால், பேருந்தின் முன்பகுதியில் எழுதினால் படிக்க வசதியாக இருக்காது என அதிமுக ஆட்சியின்போது மாற்றப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய செய்திபோல, சிலர் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்ட இடங்களில் தற்போது மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எதை குற்றம் சொல்வது என தெரியாமல் இந்தப் பிரச்சினையை உருவாக்கி உள்ளனர்.
கடந்த ஓராண்டில் 7.20 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். அதற்கு முந்தைய ஓராண்டில் 6.60 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இதன்படி, ஓராண்டில் ஒரு லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதே இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.