சென்னை: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்குவதற்காக ரூ.15.48 கோடியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) தற்காப்பு பயிற்சிக்காக 6,045 நடுநிலைப் பள்ளி களுக்கு ரூ.7.25 கோடியும், 5,804 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.8.23 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியைப் பயன்படுத்தி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மாணவிகளுக்கு கையில் எளிதில் கிடைக்கும் பென்சில், பேனா ஆகிய பொருட்களைக் கொண்டு தற்காத்துக் கொள்வது தொடர்பாக பயிற்சியில் கற்றுத்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது