சென்னை: பொது மாறுதல் கலந்தாய்வில் குறிப்பிட்ட 40 ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
நடப்பு கல்வியாண்டு அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (எமிஸ்) பதிவு செய்வது சார்ந்து ஏற்கெனவே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன.
இதுதவிர 2021-22-ம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வின்போது அரசுப் பள்ளிகளில் அதிகளவு காலிப் பணியிடங்களை கொண்ட 40 ஒன்றியங்கள் முன்னுரிமை பகுதிகளாகத் தேர்வு செய்யப்பட்டன. அந்த 40 ஒன்றியங்களுக்கு மாறுதல் ஆணை பெற்று தொடர்ந்து 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு, நடப்பாண்டு கலந்தாய்வில் மாறுதல் கோரினால் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு முன்னுரிமை கோரும் ஆசிரியர்கள் அந்த ஒன்றியத்திலேயே தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்களா என்பதையும் உறுதி செய்த பின்னரே ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.