சென்னை: அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் 235-ல் இருந்து 119 ஆக குறைக்கவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.
அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் 119 பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை கடந்த மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் மாற்றுத்திறனாளிகள் மேற்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களின் தகுதிக்கு ஏற்ற பதவிகள் என்ன என்ற விவரங்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற 119 பணிகளை நிபுணர் குழு மூலம் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் 4 நிலைகளுக்கு ஏற்ப ஏ, பி, சி, டி என்ற பிரிவில், 119 பதவிகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. தற்போது, 119 இடங்களே மாற்றுத் திறனாளிகள் செய்ய ஏற்ற பணிகளாக சரிபாதியாக குறைத்து திமுக அரசு துரோகம் இழைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசு துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் குறைக்கப்படவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து,நலத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கை: அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய அரசாணை எண், 20-க்கு முன் கண்டறியப்பட்ட பணியிடங்கள், எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை. நேரடி நியமனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்தது என கண்டறியப்படும் பணியிடங்களை பதவி உயர்வுக்கு ஏற்ற பணியிடங்களாக கருத, துறையின் பணிசார் விதிகளை நிபுணர் குழு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இம்முறையில் பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தும்போது, தொடர்புடைய துறையில் உள்ள அனைத்து பணியிடங்களும் நிபுணர் குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு,
பதவி உயர்வுக்கான உகந்த பணியிடங்கள் கண்டறிப்பட்டு அரசாணை வெளியிடப்படும். எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.