சென்னை: பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் ஆக.18-க்கு தள்ளிவைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த 15-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் ஜூலை 18-க்குள் அகற்ற வேண்டும்’’ என அறிவுறுத்தியிருந்தார்.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி ஆஜராகி, ‘‘கொடிக்கம்பங் களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதனால் அதுவரை கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரினார்.
அப்போது அரசு தரப்பில், ‘‘இந்த விவகாரத்தில் முழு அமர்வு உத்தரவு பிறப்பிக்கும் வரை கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது’’ என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் கூடாது எனக்கூறி, வழக்கு விசாரணையை ஆக.18-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.