புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி வருகிறார். இதனால் அவரது மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலங்குடி தொகுதியின் எம்எல்ஏ-வான அமைச்சர் மெய்யநாதனை ரகுபதி தரப்பு திட்டமிட்டு புறக்கணித்து வருவதாகச் சொல்கிறார்கள்.
மாவட்ட திமுக சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மெய்யநாதனின் பெயரும் படமும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுவதாக நீண்ட காலமாகவே புகைச்சல் உண்டு. சில மாதங்களுக்கு முன்பு, பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதிய நிதியை ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது திமுக. இதற்காக முதலில் அச்சடிக்கப்பட்ட போஸ்டரில் அமைச்சர் மெய்யநாதன் படமோ பெயரோ இல்லை. அதன் பிறகு இதைச் சுட்டிக்காட்டிய பிறகு மெய்யநாதனின் படமும் பெயரும் போஸ்டரில் சேர்க்கப்பட்டது.
இதேபோல், ஜூலை மாதம் புதுக்கோட்டையில் தெற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. அதற்கான மேடையில் வைக்கப்பட்ட ஃபிளெக்ஸில் மெய்யநாதனின் படத்தை போடாமல் விட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு அவரது ஆதரவாளர்கள் இருக்கையை விட்டு எழுந்து சென்று மண்டல பொறுப்பாளரும் அமைச்சருமான கே.என்.நேருவிடம் உரிமைக் குரல் எழுப்பினர். அப்போது அவர்களை சமாதனப்படுத்துவதற்குள் பெரும்பாடு பட்டுப்போனார் நேரு. “இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவர் உத்தரவாதம் அளித்த பிறகே மெய்யநாதன் விசுவாசிகள் அமைதியானார்கள்.
ஆனாலும் நிலைமை மாறவில்லை. அண்மையில் புதுக்கோட்டையில் திமுக சட்டத்துறை பயிற்சி பாசறைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு தரப்பட்ட அடையாள அட்டையில் ரகுபதி படம் மட்டுமே இருந்தது; மெய்யநாதன் படம் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மெய்யநாதன் ஆதரவாளர்கள் சிலர், அடையாள அட்டைகளை அணிந்துகொள்ள மறுத்து ஆட்சேபனை செய்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மெய்யநாதனின் ஆதரவாளரான தெற்கு மாவட்ட நிர்வாகி ஒருவர், “கடந்த கால் நூற்றாண்டாக ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக் கவுன்சிலர், ஒன்றியக் குழுத் தலைவர், எம்எல்ஏ என போட்டியிடும் அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறார் மெய்யநாதன். 2021 தேர்தலில் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏ மெய்யநாதன் தான்.
கட்சிப் பணியிலும் மக்கள் சேவையிலும் அவருக்கு இணையாக யாரையும் இங்கு சொல்லமுடியாது. அப்படிப்பட்டவரை ரகுபதி தரப்பினர் ஏனோ தெரியவில்லை திட்டமிட்டு புறக்கணிக்க நினைக்கிறார்கள். ரகுபதி சொல்லி இப்படிச் செய்கிறார்களா அல்லது அவர் சந்தோஷப்படுவார் என நினைத்து இவர்களாகவே இப்படிச் செய்கிறார்களா என்றும் தெரியவில்லை.
இத்தனைக்கும் தெற்கு மாவட்டத்தில் தான் ரகுபதி மற்றும் மெய்யநாதனின் தொகுதிகள் வருகின்றன. ஆனால், கட்சிக் கூட்டம் என்றாலே தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பதால் ரகுபதியை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறார்கள். வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் நேருவிடம் மெய்யநாதனை புறக்கணிப்பது குறித்து காட்டமாகவே கேள்வி கேட்டோம். “இந்த பிரச்சினை இனிமேல் வராது” என்றார். ஆனால், மறுபடியும் அதையே செய்திருக்கிறார்கள்.
2016-ல் வெற்றிபெற்று எதிர்க்கட்சி எம்எல்ஏ-வாக இருந்தவர் மெய்யநாதன். 2021 தேர்தலில் அவரை வேட்பாளர் பரிசீலனைக்கு கொண்டு வரவே சிலருக்கு விருப்பமில்லை. கடைசியில், அமைச்சர் நேரு பார்த்துவிட்டு சம்பந்தப்பட்டவர்களை கடிந்து கொண்டதுடன் மெய்யநாதனின் பெயரையும் உள்ளே கொண்டு வந்தார்.
இத்தனை நெருக்கடிகளையும் தாண்டி தேர்தலில் வென்று அமைச்சராகி மக்கள் மத்தியில் மெய்யநாதன் பெயரெடுத்து வருவதை ஜீரணிக்க முடியாதவர்கள் அவரை எப்படியெல்லாமோ இருட்டடிப்பு செய்கிறார்கள். சீப்பை எடுத்து மறைத்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று போய்விடுமா என்ன?” என்றார்.