ஈரோடு: அமெரிக்க பொருட்களை புறக்கணிக்குமாறு பாஜக தேசிய செயற் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கூறினார்.
இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற ஹெச்.ராஜா,பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா 50 சதவீதம் வரிவிதித்துள்ளது. இதனால், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலத்தில் கொண்டுவரபட்ட ‘காட்’ உடன்படிக்கை தோற்றுப்போயுள்ளது. நாட்டு மக்கள் சுதேசி உற்பத்திப் பொருட்களை வாங்க வேண்டும். அமெரிக்க பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்க மாட்டோம் என்று அனைவரும் முடிவெடுக்க வேண்டும்.
அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைக்கு, மற்றொரு பொருளாதார நடவடிக்கை மூலமாக மட்டுமே பதில் கொடுக்க வேண்டும். மற்ற நாடுகளோடு வர்த்தகத்தை அதிகரிப்பதன்மூலமாக, அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்படக் கூடிய இழப்பை சரி செய்ய முடியும். ஜிஎஸ்டி வரி விதிப்பில் சீர்திருத்தத்தை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறுபான்மையினர் வாக்குகள் மட்டுமே போதும் என தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார் என்பது அவரது பேச்சில் தெரியவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.