சென்னை: அமித் ஷா குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரூ.1,76,000 கோடி ஊழல் வழக்கில் சிக்கி திகார் ஜெயிலில் இருந்த திமுக எம்பி ஆ.ராசா, அரசியல் நாகரீகம் அற்ற முறையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சமீபத்தில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்போதும் இவருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதையும் மக்கள் அறிவார்கள்.
அருவருப்பான முறையில் பொது வெளியில் பேசுவதை ஆ.ராசா வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு முன்னாள் மத்திய அமைச்சராக செயல்பட்டவர் தரம் தாழ்ந்து மற்ற தலைவர்களை பேசுவது எந்த வகையில் நியாயம்? தமிழக முதல்வரும் ஆ.ராசா போன்றவர்கள் பேசுவதை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியது – கண்டிக்கத்தக்கது.
நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவோம் என்ற சர்வாதிகார போக்கை திமுக கடைப்பிடிக்கிறதா? அரசியலில் என்ன பேசுவது என்ற வரைமுறை அற்ற பிற்போக்குத்தனமான கொள்கைகளை திமுக கடைபிடிக்கிறதா? எல்லோருமே பதிலுக்கு பதில் பேசினால் தமிழக மக்கள் என்ன நினைப்பார்கள்? ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் நாகரிகமற்ற முறையில் பேசுவது மக்களிடையே வெறுப்பை தான் ஏற்படுத்தும்.
வேடிக்கை பார்க்க முடியாது: ஆ.ராசா போன்றவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. ஆ.ராசா போன்றவர்களின் சுய ரூபத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாகவும், இது போன்ற அறிவற்ற வகையில் பேசுவதை தட்டி கேட்கும் வகையிலும் நாளை(ஜூலை 1-ம் தேதி) செவ்வாய்க்கிழமை சென்னை பெருங்கோட்டத்தில் 7 இடங்களில், தனித்தனியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் தோறும் முக்கிய மாநில நிர்வாகிகள் மாவட்டத் தலைவர்கள் தலைமையேற்று நடத்த இருக்கிறார்கள். நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதையும், இது போன்ற அராஜக போக்கை தொடர்ந்து திமுக வெளிப்படுத்தினால் பாஜக தொடர் போராட்டத்தை நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.