சென்னை: அமித் ஷாவை அவதூறாகப் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியின் அதிகார மமதையில், இந்து கடவுள்களையும், இந்து மதத்தையும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கொச்சையாகப் பேசி வருகிறார். சமீபத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், திமுகவினர் திருநீறு உள்பட இந்துமத அடையாளங்களுடன் நடமாடக் கூடாது என்று மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பேசியிருந்தார்.
ஆ.ராசாவின் தனிப்பட்ட கருத்து என்று திமுக அமைச்சர் சேகர்பாபு இதற்குப் பதில் சொல்லியிருந்தார். ஆனால் ஆ.ராசா அப்படி பேசியது, அவரின் தனிப்பட்ட கருத்தா? அல்லது திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதல்படி பேசினாரா? என்பதற்கு முதல்வர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
அதேபோல், உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து ஆ.ராசா பேசியதை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்காமல் மவுனம் காப்பது ஏன்? அமித் ஷாவை அவதூறு செய்யும் நோக்கில், திரை மறைவு அரசியலாக, தன்னுடைய நண்பர் ஆ.ராசாவை வைத்து கேவலமான அரசியல் செய்கிறாரோ? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தன்னுடைய அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஆ.ராசா மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.