சென்னை: தேர்தலை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணம், தேமுதிக பொதுச்செயலாளர் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் ஆகியவற்றுக்கு அக்கட்சிகள் இலச்சினைகளை வெளியிட்டுள்ளன.
சமூக நீதி, வன்முறையில்லா வாழ்வு, வேலை, விவசாயம் மற்றும் உணவு, வளர்ச்சி, கல்வி உள்ளிட்ட 10 வகையான அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்து தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும், தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பாமக தலைவர் அன்புமணி நாளை (ஜூலை 25) முதல் நவ.1-ம் தேதி வரை ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
இதை முன்னிட்டு ‘உரிமை மீட்க.. தலைமுறை காக்க.. அன்புமணியின் நடை பயணம்’ என்ற வாசகங்கள் அடங்கிய இலச்சினையை அன்புமணி நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
அதேபோல் பேரவை தேர்தலையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆக.3 முதல் 23-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’, ‘மக்களைத் தேடி மக்கள் தலைவர்’ என்ற தலைப்புகளில் நடைபெறும் சுற்றுப்பயணத்துக்காக இலச்சினையை அக்கட்சி நேற்று வெளியிட்டது. இதில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.