விழுப்புரம்: அன்புமணி தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும். அந்த அளவுக்கு மன வேதனைப்பட்டுள்ளேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்ககளிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமையை வளர்த்தெடுக்க ‘level up’ என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளதை வரவேற்கிறோம். இத்திட்டத்தை 1 முதல் 5-ம் வகுப்பு வரை விரிவுப்படுத்த வேண்டும்.
சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. எனவே, பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கும்போது கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி போராடிய சிஐடியு தோழர்களை விருதுநகர் எஸ்.பி. கண்ணன் எச்சரித்துள்ளது கண்டனத்துக்குரியது. திருப்புவனத்தில் போலீஸாரால் கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக எம்எல்ஏ அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. நிறுவனர், தலைவரான எனக்கு மட்டும்தான் உள்ளது. அன்புமணி தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும். அந்த அளவுக்கு மன வேதனைப்பட்டுள்ளேன். கூட்டணி தொடர்பாக திமுக, அதிமுகவுடன் கூட்டணி பாமக பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பது வதந்தியாகும். வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த மகளிரும் கலந்துகொள்ளலாம். மக்களைப் பாதிக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.