சென்னை: அன்புமணி தலைமையில் வரும் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே அண்மைக்காலத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு உள்ளது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு அவரை செயல் தலைவராக நியமித்தத்தோடு மட்டுமல்லாமல் இனிமேல் நான் தான் பாமகவிற்கு தலைவராக இருப்பேன் என்றும் ராமதாஸ் அறிவித்தார்.
பொதுக்குழு மூலம் உரிய விதிகளின்படி தேர்வு செய்யப்பட்ட என்னை யாரும் தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும் அன்புமணி தெரிவித்தார்.
இதனையடுத்து பாமகவில் தற்போது இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். வரும் ஒன்பதாம் தேதி அன்று மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
இந்தநிலையில் வரும் 9 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி ராமதாஸ் தரப்பை சேர்ந்த கட்சியின் பொதுச் செயலாளர் முரளி சங்கர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அதில் கட்சியின் விதிகளுக்கு முரணாக பொதுக்குழு கூட்டம் நடத்தபடுவதல் தடை விதிக்க வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாகவும் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது என கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு , செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. செயல் தலைவர் அன்புமணி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், குழப்பம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும் மனுவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவரும், நிறுவனருமான ராமதாஸின் அனுமதியில்லாமல் அன்புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கெதிராக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் அன்புமணி அறிவித்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அன்புமணியின் இந்த அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறுப்பில் இல்லாத நபர்கள், விதிகளின்படி கட்சி பொதுக் குழுவை கூட்ட அதிகாரம் இல்லை. எனவே 9 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது