சென்னை: அனைத்து நியாயவிலைக் கடைகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலிறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களையும் வகையில், அனைத்து நியாய விலைக் கடைகளையும் ஒரே துறையின்கீழ் கொண்டு வந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகின்றது.
இது தொடர்பாக அரசுக்கு பல கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாகத்தலையிட்டு, அனைத்து நியாய விலைக் கடைகளையும் ஒரே துறையின்கீழ் கொண்டு வந்து, பணியாளர்களின் ஊதிய முரண்பாட்டினைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.