புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீத கல்விக் கட்டண விலக்கு தர ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் தந்துள்ளார்.
புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உட்பட உயர்கல்விக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ‘சென்டாக்’ மூலம் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து உயர்கல்விக்கும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி அளிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும், சட்டசபையிலும், அரசு விழாக்களிலும் உயர்கல்வியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு முழு கல்வித் தொகையும் வழங்கப்படும் என அறிவித்தார். இருப்பினும் இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் உயர்கல்விக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். தொடர்ந்து உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை செயலர் கிருஷ்ணன் மோகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, அரசாணை வெளியிட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாணவர்களை ஊக்கவிக்கவும், நிதி நெருக்கடியால் மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை தவிர்ப்பதை தடுக்கும் வகையிலும் அனைத்து மாணவர்களுக்கும் 100 சதவீத கல்விக் கட்டண விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி அரசு, சமூக கல்லுாரியில் அரசு ஒதுக்கீடு இடங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இது பொருந்தும்.
2024- 25-ம் கல்வி ஆண்டிலிருந்து இந்த கல்வித்தொகை வழங்கப்படும். அரசின் இந்த கொள்கை முடிவு, அனைத்து தொழில்முறை, பிற கல்வி நிறுவனங்களுக்கான நிர்வாக துறைகளுக்கும் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள், அந்தந்த நிறுவனங்களின் நிதி சார்பு விவரங்களைப் பெற்று, மானிய உதவிக்கான அவர்களின் கணக்குத் தலைப்பில் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, அதற்கேற்ப நிதியை விடுவிப்பதற்கு தகுதி வாய்ந்த அதிகாரிகளின் ஒப்புதலை பெற வேண்டும்.
புதுச்சேரி லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரிக்கு, 2022- 23 கல்வியாண்டு முதல் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகம், காமராஜர் பொறியியல் கல்லுாரிகளுக்கு இணையாக கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படும் என்று கிருஷ்ணன் மோகன் தெரிவித்துள்ளார்.