Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்…” – மதுரையில் ஸ்டாலின் உரையின் 15 அம்சங்கள்
    மாநிலம்

    “அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்…” – மதுரையில் ஸ்டாலின் உரையின் 15 அம்சங்கள்

    adminBy adminJune 1, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்…” – மதுரையில் ஸ்டாலின் உரையின் 15 அம்சங்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: “தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி வந்தால் தமிழகத்தில் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக் கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்கவிட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள்” என்று திமுக பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதன் முக்கிய அம்சங்கள்

    “இந்த மண்ணில் சமத்துவம், சுயமரியாதை, சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று உருவானவர்கள் நாம். இனத்துக்காக உரிமைக் குரல் எழுப்புகிறவர்கள் நாம். கொள்கைக்காக வாழுகிறவர்கள் நாம். கொள்கையை பரப்ப கட்சியும், கொள்கையை வென்றெடுக்க ஆட்சியும் தேவை என்று உழைப்பவர்கள் நாம். தடம் மாறாத கொள்கைக் கூட்டம் நாம், அதனால்தான் எந்தக் கோமாளிக் கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியவில்லை, இனியும் வெல்ல முடியாது.

    இது வழக்கமான பொதுக்குழு அல்ல, ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு, அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றால், “ஏழாவது முறையாக திமுக. ஆட்சி அமைத்தது. கழகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது”. “இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது”. இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும். அதுக்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் இது.

    உங்களுக்கே தெரியும், நான் மமதையில் பேசுகிறவன் அல்ல. “கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை” என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல. எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம். சொல்லைவிட செயலே பெரிது. வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று நான் சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில்தான்.

    திமுகவுக்கு என்றைக்கும் ஊடக சொகுசு இருந்ததில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக மேல்தான் அதிக விமர்சனங்கள் குவியும். ஆனால், திமுக ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது. அது வெளியே தெரியாமல் மறைக்க, திசை திருப்ப சிலர் நினைக்கிறார்கள்.

    எப்படிப்பட்ட சூழலில் நாம் ஆட்சியில் அமர்ந்தோம் என்று மக்களுக்குத் தெரியும். கடந்த அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்கு சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். ஒன்றிய பாஜக அரசு, நம்முடைய உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையையும் எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறோம். நமக்கு நியாயமாக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்க நினைத்தாலும், அந்த நெருக்கடிகள் அனைத்தையும் கடந்து, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    பொருளாதார ரீதியான, அரசியல் ரீதியான, ஆளுநர் வழியாக, உரிமைகளை அபகரிக்கும் முட்டுக்கட்டைகள் என்று எத்தனை எத்தனையோ தடைகளை ஒன்றிய பாஜக அரசு போட்டாலும், அதை எல்லாம் கடந்து, இன்று இந்தியாவிலேயே வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்.

    2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. அதனால், வழக்கத்தைவிட அதிகமாக, திமுகவுக்கு எதிராக, திமுக ஆட்சிக்கு எதிராக, அவதூறு அம்புகளை மக்கள் மத்தியில் எதிராளிகள் வீசுவார்கள். கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்கள் மனதில் பொய்யை விதைக்க முயற்சிப்பார்கள். சமூக ஊடகங்கள் மூலமும், விதைப்பார்கள். இதையெல்லாம் முறியடிக்க நாம் தயாராக வேண்டும். அவர்களின் பொய்களுக்கு முன்னால், நம்முடைய உண்மை மக்களிடம் சென்று சேர வேண்டும்.

    கோடிக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட பேரியக்கம் திமுக. இந்த பொதுக்குழுவுக்கு அந்த கோடியில் இருந்து, 7 ஆயிரம் பேர் வந்திருக்கிறீர்கள். இது மாபெரும் மரியாதை. காலம் காலமாக உழைத்து, ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆகாமல், ஒன்றிய, நகரச் செயலாளர் ஆக முடியாமல், நிர்வாகியாக ஆக முடியாமல் மறைந்தவர்கள்தான் கட்சியில் அதிகம். தலைவர் கருணாநிதியை பக்கத்தில் நின்றுகூட பார்க்காமல் மறைந்தவர்கள் அதிகம். அண்ணா அறிவாலயத்தின் வாசல் படியைக்கூட மிதிக்காத உடன்பிறப்புகள் அதிகம். உங்களை வாழ வைத்த கட்சியை வாழ வையுங்கள். இந்த இயக்கத்துக்கு உண்மையாக இருங்கள். இதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள்.

    நம்முடைய வெற்றிக் கூட்டணி வலுவாக தொடர்கிறது என்றால் அதற்குக் காரணம், நம்முடைய கூட்டணி தோழர்களை நாம் மதித்து செயல்படுவதுதான். நம்முடைய கூட்டணித் தலைவர்களிடம் நான் எப்படி நட்போடும் பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும். சில இடங்களில் முரண்கள் இருந்தாலும், பேசி விட்டுக்கொடுத்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றிப் பயணத்தை தொடர முடியும்.

    எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி என்ன நினைத்தார்? நம்முடைய கூட்டணி பிரிய வேண்டும் என்று நினைத்தார். அதற்காக, என்னென்ன கதைகளையோ உருவாக்கினார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவுடன் பிரிந்த மாதிரி நடித்தால், நம்முடைய கூட்டணி உடையும் என்று நினைத்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. அதனால்தான், இப்போது டெல்லிக்குச் சென்று, பல கார்களில் மாறிமாறி, அமித் ஷாவை சந்தித்து, மீண்டும் பாஜகவிடம் சரணடைந்துவிட்டார். அதிமுக, பாஜக கூட்டணியை அமித் ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தைகூட பேசாமல், பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். என்ன ஒரு அடக்கம்? சசிகலா இவரை முதலமைச்சராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக்‌ஷன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு. என்ன, காலில் மட்டும்தான் விழவில்லை, அது தனியாக செய்தார்களா என்று நமக்கு தெரியவில்லை.

    நாம் கேட்பது, ஒரு மாநிலத்தில், ஒரு கூட்டணிக்கு யார் தலைமை வகிக்கிறார்களோ, அவர்கள்தான் கூட்டணியை அறிவிப்பார்கள். ஆனால், இங்கு அமித் ஷா அறிவிக்கிறார். இதிலிருந்தே இவர்கள் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றிருக்கிறது அதிமுக. அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பாஜகவின் கன்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார். அதனால்தான் அமித் ஷா இங்கு அடிக்கடி வருகிறார்.

    நான் ஏற்கெனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே அவுட் ஆப் கன்ட்ரோல் தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். பாஜக கூட்டணி ஆட்சி வந்தால், தமிழ்நாட்டை என்ன செய்வார்கள் என்று சொல்ல வேண்டும். மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக் கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்கவிட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது. இந்தி மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்திவிடுவார்கள் என்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

    புதிதாக சிலர் “நாங்கள்தான் மாற்று” என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள். அவர்களுக்கும் பதிலடி தர வேண்டும்.

    பாஜகவிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் கட்சி கட்டமைப்பும், கொள்கை பிடிப்பும், வலிமையான தலைமையும், நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது என்று தமிழ்நாட்டில் இருக்கும் சின்ன குழந்தைக்குக்கூட தெரிந்திருக்கிறது. இது மட்டும் தேர்தல் வெற்றிக்கு போதாது. பூத் அளவில் வெற்றி பெறும் வாக்குகள்தான் தொகுதியில் வெற்றிபெற வைக்கும். தொகுதிகளை வென்றால்தான் ஆட்சி. அதனால், பூத் அளவிலான மைக்ரோ மேனேஜ்மெண்டும் மிக முக்கியம். மீண்டும் நம்முடைய ஆட்சிதான் வர வேண்டும் என்று புரிய வையுங்கள்.

    ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்ன என்றால், கழக நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரைவாக, ஒன் டூ ஒன் பேசுவோம். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பொறுப்பை நான் வழங்கியிருக்கிறேன். அதை சிறப்பாக, எந்த விமர்சனமும் இல்லாமல், செய்து காட்டினால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது.

    திமுக இருக்கும் வரை, இந்த ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். பொதுக்குழுவில் தொடங்கியிருக்கும் இந்தப் பயணத்த – சட்டமன்றத் தேர்தல் வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்தில் நாம் நிறைவு செய்ய வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா?” – திருவள்ளூர் சம்பவத்தில் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

    July 18, 2025
    மாநிலம்

    “திமுக கூட்டணியில் எந்த கட்சியும் ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை” – நவாஸ்கனி எம்.பி

    July 18, 2025
    மாநிலம்

    மதுரையில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் வேகம் எடுக்குமா?

    July 18, 2025
    மாநிலம்

    “மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் திமுகவினர்” – ஆர்.பி.உதயகுமார் சாடல்

    July 18, 2025
    மாநிலம்

    திருவள்ளூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தமிழிசை சரமாரி கேள்வி

    July 18, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் ஆதார் விவரம் சேகரிக்க தடை கோரி வழக்கு!

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘பாரதத்தின் மண்ணிலும் நீரிலும் இந்துத்துவா ஆழமாக கலந்துள்ளது’- சிவராஜ் சிங் சவுகான் கருத்து
    • “பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா?” – திருவள்ளூர் சம்பவத்தில் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
    • 5 குழந்தைகளுக்கான தினசரி நேர்மறையான உறுதிமொழிகள் (மற்றும் அவற்றைப் பயிற்சி செய்ய சரியான நேரம்) | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “திமுக கூட்டணியில் எந்த கட்சியும் ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை” – நவாஸ்கனி எம்.பி
    • “தாஜ்மஹால் இன்று மூடப்பட்டுள்ளது”: 6 பொதுவான தாஜ்மஹால் மோசடிகள் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.