சிவகாசி: அதிமுக ஆட்சி அமைந்த உடன் பட்டாசு தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சிவகாசி அருகே நாரணாபுரம் தனியார் பட்டாசு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்து, தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சரவெடி தடையால் வேலை பற்றாக்குறை உள்ளதாகவும், வேறு தொழில்கள் தெரியாது என்பதால் கஷ்டப்படுகிறோம். அதிகாரிகள் எப்போது ஆய்வுக்கு வருவார்களோ என்ற அச்சத்துடன் பணியாற்றி வருகிறோம். நாங்கள் பாதுகாப்பாக பணியாற்றினாலும், அச்சம் காரணமாக விபத்து நடக்கிறது, என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அப்போது, தொழிலாளர்களிடம் உங்களுக்கு சொந்த வீடு உள்ளதா என கேள்வி எழுப்பிய, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “அதிமுக ஆட்சி அமைந்த உடன் பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகளுக்கு இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். மேலும் பட்டாசு தொழில் பிரச்சினை இல்லாமலும், அதே நேரம் பாதுகாப்பாகவும் நடக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.