பெரியகுளம் / சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஒருங்கிணைந்தால்தான் வெற்றிபெற முடியும். இதற்கான முயற்சியை தற்போது செங்கோட்டையன் முன்னெடுத்துள்ளார். அவரது முயற்சி நிச்சயம் வெற்றிபெறும்.
குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் நல்லவர். இவரை ஆதரித்து அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழக ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரான தர்மர் எம்.பி. வாக்களித்துள்ளார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறக்கூடாது… அதிமுக எம்.பி. தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷாவை நான் சந்தித்தேன். செங்கோட்டையனை அழைத்துப் பேசியதாக அமித்ஷா என்னிடம் கூறவில்லை. எந்த கட்சியாக இருந்தாலும், அதற்கு கட்டுப்பட்டுத்தான் உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்” என்றார்.