திருப்பத்தூர்: அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களை கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறார்கள், அதை அதிமுகவினர் வேடிக்கைப் பார்க்கிறார்கள். அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வங்கியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் நலனில் அக்கறை இல்லாத கடந்த ஆட்சியாளர்களால் சீரழிந்த தமிழகத்தின் வளர்ச்சியை திராவிட மாடல் அரசு கடந்த 4 ஆண்டுகளில் மீட்டெடுத்துள்ளது. தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்யும் மத்திய அரசால்கூட நமது வளர்ச்சியை மறைக்க முடியவில்லை.
தமிழகம் 9.69 சதவீத வளர்ச்சியுடன், மற்ற மாநிலங்களைவிட பொருளாதாரத்தில் புதிய உச்சத்தை அடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.182 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.425 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்பட்டு, 14 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
இன்னும் 5 மாதங்களுக்குள் தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை தாண்டி கடந்த டிசம்பரில் இருந்து தற்போது வரை 6.92 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் வீடு கட்டும் திட்டமான பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தில் ஒரு வீடு கட்ட ரூ.1.20 லட்சம் ஒதுக்கப்படுகிறது. இதில் 60 சதவீதம் நிதியை மத்திய அரசும், 40 சதவீதம் நிதியை மாநில அரசும் தருகின்றன.
மாநில அரசு நிதி வழங்கியும், அதை மத்திய அரசு திட்டம் என்கின்றனர். பாஜகவும், அதிமுகவும் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், மதத்துக்காக கவலைப்படுகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களைக் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறார்கள். அதை அண்ணா பெயரில் கட்சி நடத்துபவர்கள் (அதிமுக) வேடிக்கைப் பார்க்கிறார்கள்.
அண்ணா பெயரையே அவர்கள் அடமானம் வைத்துவிட்டார்கள். தற்போது கட்சியை அடமானம் வைத்தவர்கள், நாளை தமிழகத்தை அடமானம் வைக்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு முதல்வர் பேசினார். இதில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் நல்லதம்பி, தேவராஜ்,வில்வநாதன், மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.