சென்னை: முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டு அங்கே நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று மலர்தூவி மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து நினைவிடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
அண்ணா நினைவிடத்தில், ஸ்தூபி, சிலை புதுப்பிக்கும் பணி, புல்வெளிகளை பராமரித்தல், உடைந்துள்ள பளிங்குக் கற்களை சீரமைத்தல், தரையில் மழைநீர் தேங்காத வண்ணம் சீர் செய்யும் பணி, அண்ணா வளைவு முகப்பை தூய்மை செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருணாநிதி நினைவிடத்தில் கலைஞர் உலக அருங்காட்சியகத்தில் கலைஞர் நிழலோவியங்கள், உரிமைப் போராளி கலைஞர், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம், கலைஞர் புத்தக விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தை 65 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் ரா.பாஸ்கரன், செயற்பொறியாளர் எஸ்.விஜய்ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.