தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பூத்கமிட்டி அமைத்தல், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் என அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வையும் நடத்தி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழலில் தமிழகத்தில் 4 முனை போட்டி இருக்கும் என தெரிகிறது. திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நடிகர் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாக களம் காண தயாராகி வருகின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதில் ஏதேனும் மாற்றங்கள் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கியுள்ளது. ஜனவரி மாதம் இறுதி வாக்காாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது, இதுவரை பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகளை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. வாக்காளர்கள் தங்கள் பெயர்களை ஆன்லைன் மற்றும் செயலி வாயிலாக சேர்க்க முடியும்.
இதற்கிடையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இதற்கான கருத்துகளையும் கேட்டு அதன்படி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை ஒட்டியே சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லியில் தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வாக்காளர்கள் பதிவை முறைப்படுத்துவது, குளறுபடிகளை களைவது போன்ற பணிளுக்காக தொகுதிவாரியாக வாக்காளர் பதிவு அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதில், தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான வாக்காளர் பதிவு அதிகாரிகள் யார் என்ற பட்டியலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அரசிதழில் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர், சார் ஆட்சியர் , மாநகராட்சிகளில் உதவி ஆணையர், நிலையில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அந்தந்த தொகுதிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் பணிகளை முழுமையாக கண்காணி்ப்பார்கள். தேர்தல் நெருங்கும் வேளையில், மாவட்ட வாரியாக பார்வையாளர்களும் நியமி்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் சீரமைக்கும் பணிகளும் நடைபெறும்.